காஞ்சிபுரம் அத்தி வரதர் உற்சவத்தின் 13-வது நாளான இன்று பச்சைப்பட்டு உடுத்தி பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார் எம்பெருமான்.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
இப்பெருவிழாவில் கலந்துகொண்டு அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். கடந்த 12 நாட்களில் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று விடுமுறை என்பதால் காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை காண சுமார் 7 கி.மீ தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து வருகின்றனர்.