ஜாதக பலனைக் காண ஜோதிடரிடம் காத்திருப்பது சரியா?

ஒருவர், ஒரு ஜோதிடரிடம் தனதோ அல்லது தனது குடும்ப அங்கத்தினரின் ஜாதகத்தையோ கொண்டு செல்கிறார்.
ஜாதக பலனைக் காண ஜோதிடரிடம் காத்திருப்பது சரியா?

ஒருவர், ஒரு ஜோதிடரிடம் தனதோ அல்லது தனது குடும்ப அங்கத்தினரின் ஜாதகத்தையோ கொண்டு செல்கிறார். அவரிடம் தாம் கொண்டு சென்ற பிறப்பு குறிப்புகளான, பிறந்த தேதி, மாதம் வருடம், நேரம், பிறந்த ஊர் போன்றவற்றை அளிக்கிறார். இவர் என்ன நினைக்கிறார் என்றால், இவற்றைக் கொடுத்தவுடன் உடனடியாக ஜோதிடர் பலனை (குறி) சொல்வது போல் சொல்லிவிடுவார் என்று. நிச்சயம், ஜோதிடம் ஒரு குறி அல்ல. அது ஒரு விஞ்ஞானம். அதில் பல்வேறு கணக்குகள் உள்ளது. ஒவ்வொரு வினாக்களுக்கும், ஒருவித கணக்கு. சக்கரங்களின், அஷ்டகவர்க போன்ற பலவித விதிகளுக்கு உட்பட்டே ஒருவரின் ஜாதகரின் பலன் அமையும்.

முதலில், அந்த ஜோதிடர், கொடுத்த பிறப்பு குறிப்புகளைக் கொண்டு வந்தவர் அளித்தது ஆணினுடையாதா அல்லது பெண்ணினுடையதா என ஆய்வு செய்வார். பிறகு அந்த ஜாதகர், தமது குலதெய்வ வழிபாட்டை சரிவரச் செய்கிறாரா அல்லது தடைப்பட்டுள்ளதா எனப் பார்க்கிறார். அவரின் தெய்வம் ஆணா அல்லது  பெண்ணா என்பதையும் மற்றும் அவரின் குல தெய்வம் சாந்தமான படையல் கேட்கும் தெய்வமா அல்லது பலிக்கவர் தெய்வமா என்பதைக் காண்பார். மேலும், அவரின் குலதெய்வ ஆலயம் பழுதடைந்து உள்ளதா அல்லது தினசரி பூஜை சரிவர நடக்கிறதா என்பதையும், ஜாதகரின் ஜனன கால ஜாதகத்தில் காண முடிகிறது. அவரின் குலதெய்வம் மாறி வணங்கி வரப்படுகிறதா என்றும் காண முடிகிறது.

குல தெய்வ தோஷம் உள்ளதா, ப்ரம்மஹத்தி தோஷம், பித்ரு தோஷம் போன்ற வேறு ஏதாவது உள்ளதா என்றும் அதற்கான விதிவிலக்கு உள்ளதா எனவும் காணவேண்டி வரும். பின்னர், ஜாதகர், தமது மூதாதையருக்கு பிதுர் கர்மாக்கள் தவறாமல் செய்கிறாரா என்பதைக் காண்பார். இதுவும் ஒருவித தோஷமாகக் காண இயலும் அல்லது ஒரு சில கிரகங்களின் அமர்வால் / பார்வையால் / இணைவால் குறிக் காட்டும்.

பொதுவாகவே, இவ்விரண்டையும் அதாவது, குல தெய்வ பூஜை மற்றும் பித்ரு கர்மா செய்தல், இவ்விரண்டையும், தவறாமல் செய்பவர்களுக்கு, அவர் தம் குடும்பத்தினருக்கு எவ்வித இடையூறும், தொல்லைகளும் எந்த விஷயத்திலும் வருவதில்லை. அவர்கள் ஜோதிடரை நாடவேண்டிய அவசியமும் வருவதில்லை. இதனை, கண்கூடாக சிலரின் ஜாதக அமைப்பில் காணவே முடிகிறது. அதற்கு மேலும் பிரச்னைகள் இருப்பின் அது தசா புத்தி போன்றவற்றினை ஆராய்ந்து பார்ப்பதாலும் மற்றும் கோள்சார பலன்களை ஆய்வு செய்வதாலும் சரியான தீர்வினை ஜோதிடர்கள் அளிப்பர்.

மேற்கூறிய அனைத்தையும் மற்றும் சிலவற்றையும் ஆராய்வதால், பலன் காண வந்தவரின் பிறப்பு குறிப்புகள் சரி என்பதை நிலைநாட்டும். அதன் பிறகு ஜாதகரின் பலன்களைத் துல்லியமாகவும் சரியாகவும் ஒரு ஜோதிடரால், காண இயலும். அப்படி இல்லாத பட்சத்தில், ஜோதிடர் பிறந்த நேரத்தை 4 நிமிடங்கள் வரை கூட்டவோ, கழிக்கவோ செய்து பலன் காணச் செய்வார். அப்படியும் சரிவராது போது ஜாதகர் அளித்த குறிப்புகள் தவறு என்று அறிந்து அதனை மேற்கொண்டு ஆய்வு செய்ய மாட்டார். பலன் கேட்க வந்தவரின் பிறப்பு குறிப்புகளை, திருப்பி அளித்துவிடுவார். ஏனெனில், சரியான பிறப்பு குறிப்பு இல்லாமல் இவ்வகை, பராசரரின் வேத கால / பாரம்பரிய ஜோதிட முறையில்; பலன்களைக் காண்பது மிகவும் கடினம்.

அன்றி, உடனடியாக துரித உணவு போல (FAST FOOD) ஆய்வு செய்யாமல் பலன் சொல்லும் போதும், திருமணப் பொருத்தம் காணும் போதும் தவறாக போவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. எனக்கு தெரிந்து திருமணப் பொருத்தம் பார்க்க வருபவர்கள் காட்டும் அவசரத்தைப் பார்த்தால், ஏதோ இவர்களே அனைத்தையும் முடித்துவிட்டு ஜோதிடரின் கருத்து அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் இருக்க வேண்டும் என்பது போல் உள்ளது. திருமணப் பொருத்தத்தை 8 / 9 பொருத்தம் உள்ளது எனப் பார்த்தவர்களில் அதிக எண்ணிக்கையில், திருமணம் ஆகி சில காலத்திற்குள்ளாகவே, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் காத்துக் கிடக்கிறார்கள் என்பது நிதர்சனம். அதற்கு, முக்கிய காரணிகளான, அவர்களின் ஜாதகத்தில் உள்ள மற்ற தோஷங்களையும், பாவ சாம்யம் எனும் தோஷ சாம்யம் மற்றும் அட்டகாம்சம் போன்றவற்றை காண்பதில்லாமையே ஆகும்.

சிலர் கம்ப்யூட்டர் ஜாதகம் வைத்தே பலன் சொல்பவர்களும் உண்டு. ஆம், அதில் பலன்கள் யாரோ ஒரு ஜோதிடரின், கருத்துக்கள் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பது உண்மை தான். ஆனால், அதில் கிரகங்களின் இணைவு, பார்வை, சாரம் போன்றவற்றை கணக்கில் கொள்ளப்பற்றிருக்க வாய்ப்பு இல்லை. மேலும் ஒருவரின் தசை புத்திகளினால் ஏற்படும் மாறுதல்கள் மற்றும் கோள் சாரத்தினால் ஏற்படும் நிகழ்வுகள் அளிப்பது வெகு சிரமமே. அதனால், ஒரு ஜோதிடரின் மேற்பார்வையில் கூறப்படும் பலன்கள் சரியாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றே சொல்லலாம். காலம் தாழ்வு ஏற்றப்படுவது தவிர்க்க முடியாததே. 

கம்ப்யூட்டரில், கிரகங்கள் ஒரு ராசியில் அமர்வை வைத்து மட்டுமே பலன் காணப்பட்டு அதில் திட்டங்கள் (Programme) செய்யப்பட்டுள்ளதால், அவற்றிற்கு மட்டுமே பலன்களாகப் பெற முடியும். அதே சமயம், கம்ப்யூட்டரில், சில வகை கணக்குகளான, அஷ்டக / சர்வாஷ்டக வர்க்கம் மற்றும் பலவகை வர்க்க சக்கரங்களையும், ஷட்பலம் போன்றவற்றையும் கம்ப்யூட்டர் துல்லியமாக அளிக்கிறது என்றால், அது ஒரு வரப்பிரசாதமே. அதில் தவறு வரக் காரணம் இல்லை என்றே சொல்லலாம். பிறப்பு குறிப்புகள் மட்டும் சரியாக இருத்தல் அவசியம். 

இப்போது சொல்லுங்கள், ஒரு ஜோதிடரிடம் பலன் காண செல்லும் போது காத்திருத்தல் சரியா அல்லது உடனடியாக பலன் வேண்டும் எனத் துரிதப்படுத்துவது சரியா என்பதை வாசகர்களாகிய உங்களிடமே விட்டு விடுகிறேன். சில முக்கியம் மற்றும் அதி முக்கிய விஷயங்களுக்கு பலனைக் காண வருபவர்கள் காத்திருத்தல் மிகவும் நல்லதே. சிலரின் அவசரத்திற்காகவே, சிலர் அதிகப் பணத்தைக் கொடுத்து ஜோதிடர்களைத் துரிதப்படுத்துவதும், அதுவே சில ஜோதிடர்கள் பின்பற்றுவதும் காணவே முடிகிறது. அரிய இந்த ஜோதிட அறிவியலை, போற்றி காப்போம், எதிர்கால சமுதாயத்திற்கு, இதனைத் தெளிவாக்கிச் செல்வோம். 

சாயியை பணிவோம், அனைத்து நலன்களையும் பெறுவோம். 

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகாநாதன் 

தொடர்புக்கு: 98407 17857         

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com