காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனித் திருவிழா இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடைபெறும். அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த ஜூலை 13-ம் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பரமசிவன் அடியார் கோலத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று காலை 6 மணிக்கு சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் கையில் மாங்கனி ஏந்தியவாறு பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
பக்தர்கள் மாங்கனியுடன் அர்ச்சனை செய்து, பட்டு வஸ்திரம் சாற்றி வழிபாடு நடத்தினர். அப்போது தெருவெங்கும் உள்ள வீடுகள், வணிக கட்டடங்களின் மேல் தளங்களில் இருந்தவாறு சப்பரம் நகர்ந்த பின்னர் பக்தர்களை நோக்கி மாங்கனிகள் இறைக்கப்பட்டது.
இந்த காட்சியைக் காணவும், மாங்கனிகளைப் பிரார்த்தனையின் பேரில் இறைக்கவும், இறைக்கப்படும் மாங்கனிகளைப் பிடிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து சிறப்புப் பூஜைகளும், திருக்கல்யாணமும் நடைபெற்றது. இரவு 7 மணியளவில் அம்மையார் கோயிலுக்குச் சென்றடையும் பிச்சாண்டவருக்கு, அமுது படையல் செய்யப்படுகிறது.