மருத்துவ ஜோதிடம் பகுதி 2: செவ்வாய், சந்திரனால் உடலில் உண்டாகும் நோய்கள்!

சந்திரன் சுய ஒளி அற்ற கிரகமாக இந்த பிரபஞ்ச சக்தியில் இரண்டாவது ஒளி கிரகம் திகழ்கிறது.
மருத்துவ ஜோதிடம் பகுதி 2: செவ்வாய், சந்திரனால் உடலில் உண்டாகும் நோய்கள்!

“மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று”    .

இந்த குறளில் திருவள்ளுவர் கூறியது யாதெனில் வாதம் (வாயு), பித்தம்(அழல்), கபம் (சிலேத்துமம்) என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் தாக்கும். வாயு, பித்தம், கபம் இம்மூன்றும் இயக்கங்களில் ஏற்படும் பாதிப்புகளால்தான் நோய்கள் வர பஞ்சபூத தத்துவத்தில் உள்ள கிரகங்கள்தான் முக்கிய காரணிகள் என்று ஜோதிட கூற்று.  

மருத்துவத்தில் சந்திரன் பங்கு 

சந்திரன் சுய ஒளி அற்ற கிரகமாக இந்த பிரபஞ்ச சக்தியில் இரண்டாவது ஒளி கிரகம் திகழ்கிறது. இவர் சூரியனிடமிருந்து ஒளியை வாங்கி பிரதிபலிக்கும் ஆற்றலும் வேகமாக சுழற்சியும் கொண்டது. சந்திரன் என்பவர் உடல் காரகன், உடலில் உள்ள அனைத்து பாகங்களிலும் திரவ வடிவில் இருந்து இயக்கும் தன்மை கொண்டவர். எடுத்துக்காட்டாக ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை செவ்வாய் என்றும் அவற்றில் உள்ள திரவம் சந்திரனை குறிக்கும். மனித உடல் இயக்கத்திற்கு முக்கிய காரணகர்த்தா சந்திரன். இவர் எல்ல ரத்தநாளங்களையும் சீராக ஓடச்செய்வர். உதாரணத்துக்கு ஜாதகத்தில் ராசிக்கட்டத்தை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றி வர சராசரியாக 29.32 நாட்கள் ஆகிறது. அவ்வாறே பெண்கள் உடலில் ஏற்படும் மாதவிலக்கு சுழற்சியும் நடைபெறும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை (சந்திரன், செவ்வாய் தொடர்பு). சந்திரன் என்பவர் நிலையற்ற ஒரு ஏற்ற இறக்கமான கிரகம் என்று சொல்லலாம். ஜாதகத்தில் இளமையில் வரும் நோய்களை, கடுமையான நோய்களை கண்டறிய சந்திரனின் நிலையையும், முதுமையில் வரும் நாள்பட்ட வியாதிகளைக் கண்டறிய சூரியனின் நிலையைப் பார்க்க வேண்டும். மனித உடலில் நோயை அதிகப்படுத்துவது, குறைப்பது, நோயைப் போக்குவது என எல்லாப் பணிக்கும் சந்திரனிடம் தொலையியக்கி (remote control) உள்ளது.

சந்திரனால் உடலில் உருவாக்கப்படும் நோய்கள்

சந்திரன் என்பவர் நீர் தன்மையும் மற்றும் கபத்தால் ஏற்படும் நோய்களின் காரணி ஆவர். நம் உடலில் எல்லா சத்தும் ஓரளவு தான் இருக்க வேண்டும் மீறினாலும் ஆபத்து ஏற்படும். எடுத்துக்காட்டாக நீர் ஒரு இடத்தில் நீர் தேங்கினால் அது நாற்றம் ஏற்படும். அதுபோல் நம் உடலில் உள்ள நீரின் தேக்கம் எங்கெல்லாம் அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் நோய் கிருமிகள் அதிகரிக்கும் அதில் சனி புகுந்து அழுகை ஏற்படுத்தி ராகுவுடன் சேர்ந்து வெவேறு நோய்களை கொண்டு வருவார். அதாவது ஜாலத்தால் ஏற்படும் தோஷங்களாக ஜலதோஷம்(சளி), மூச்சிரைப்பு, ஆஸ்துமா, இழுவை நோய் (வீசிங்), உள்ளங்கையில் வியர்ப்பது, தூசி, அலர்ஜி, சீதளம் என்று அடுக்கிக்கொண்டு போகலாம்.

உடலின் அருவருப்பான அமைப்பு , வளர்ச்சி இல்லாமை மற்றும் ஒழுங்கற்ற உடலமைப்புக்கு எல்லாம் சந்திரன் ஒரு முக்கிய காரகன். சில நேரங்களில் சந்திர கிரகண கதிர் தாக்கத்தில் குழந்தைகள் தாயின் வயிற்றில் இருக்கும்பொழுது மனம் மற்றும் உடல் கூறுகள் மாறுபடும்.

சந்திரனால் ஏற்படும் உட்புற நோய்களான ரத்தம் சம்பந்தப்பட்ட நோய், இடது கண், மந்த தன்மை, கருப்பை, மாதவிடாய் சுழற்சியில் மாறுபாடு , மார்பில் ஏற்படும் நோய்  நீரில் நோயைக் கொடுப்பது, நுரையீரல் பாதிப்பு, தொழுநோய்கள் (சனியோடு), பருவ கால காய்ச்சல், தொற்று நோய்கள், சொறி, சிரங்கு, விந்து நீர்த்துப் போதல்,  நீர் மற்றும் உமிழ் நீர் மூலம் பரவக்கூடிய நோய்கள், ஒவ்வாமை, காச நோய் , மனநிலையைப் பாதிப்பு , ரத்தப்போக்கு,  ரத்த அளவு குறைவு , வெள்ளை அணுக்கள் குறியும் தன்மை, காக்காய் வலிப்பு, மஞ்சள் காமாலை, வயிற்றுப் புண்கள் மற்றும் வயிற்றுப் போக்கு, ஆறாத புண், கணையம், சிறுநீரகச் செயல்பாடு, தைராய்டு (சந்திரன் செவ்வாய் தொடர்பு),  மார்பக புற்றுநோய் (ராகு)  இன்னும் நீர் சம்பந்த நோய்கள்

ஒருவருக்கு ஆறு அல்லது எட்டாம் அதிபதியானவர் லக்னாதிபதி அல்லது சந்திரனுடன் சேர்ந்தாலோ தொடர்பு மற்றும் பார்வை பெற்றாலோ அவருக்கு கொடிய நோய் ஏற்படும். ஜாதகத்தில் ஆறாம் வீட்டில் பாவிகளுடன் லக்கினாதிபதியுடன்   சேர்ந்திருந்து, சந்திரனும் கெட்டுப் போயிருந்தால் புற்றுநோய் அல்லது சில நீண்ட நோய்களினால் பாதிப்பு ஏற்பட  வாய்ப்பு அதிகமுள்ளது. 

தீர்வு

சந்திரன் தாக்கம் குறைவாக இருந்து சூடு அதிகமாக இருந்தால் குளிர்ச்சி பொருள்கள் உணவு மற்றும் அரிசி உணவு, பால், தயிர், காரம் இல்லாத உணவு, இளநீர், வேப்ப கொழுத்து, மாதுளம் பழம், முள்ளங்கி, பரங்கிக்காய், மற்றும் நீர் காய்கறிகள் உட்கொள்ள வேண்டும். சந்திரன் என்கிற நீரின் தாக்கம் இருந்தால் பித்த மற்றும் சூட்டு உணவுகள் கோதுமை, சிகப்பு அரிசி, சிகப்பு செம்பருத்தி பூ  உட்கொள்ள வேண்டும்.

அல்சைமர் (alzheimer) என்னும் நோயானது மனதில் உள்ள எண்ணங்கள் மற்றும் நினைவுகளை மறக்கும் தன்மை கொண்டது. இந்த நோயின் தாக்கம் தற்காலங்களில் அதிகமாகிக்கொண்டு உள்ளது. சந்திர கிரகத்தால் ஏற்படும் ஒருவித மனப்பாதிப்பு.  இந்த நோய்க்கு சரியான தீர்வு வயதானவர்களை, தனிமையில் விடாமல் நினைவுகளை அதிகப்படுத்தும் வகையில், அவர்களைக் கூட்டுக் குடும்பமாக இருக்க வைக்க வேண்டும். இந்த நோயின் தாக்கம் என்பது சிறிது காலம் தள்ளிப்போகலாம் என்பது என் கூற்று.

சிலபேர் நீர் என்ற குடித்தால் நல்லது என்று லிட்டர் லிட்டராக அருந்திக்கொண்டே  இருப்பார்கள் அது மிகவும் தவறு. அதுவும் அவர்கள் உடம்பில் நீர் சத்து அதிகம் இருந்தால் (சந்திரன் தாக்கம்) அது உடலைப் பாதிப்பு கொண்டுவரும்.  உணவு மற்றும் நீர் சரியான விகிதாசாரத்தில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். தாகம் எடுக்காமல் நீரினை குடிப்பதும் நல்லதல்ல.  

ஆங்கில மருந்தை தவிர்த்து கொஞ்சம் நம் நாட்டு மருந்தான கருந்துளசி, வேப்பிலை,  ஓமவல்லி இலை, தூதுவளை, அடாதோடா, வெற்றிலை, திரிபலா சூரணம் உட்கொள்ளவும். மாதம் ஒருமுறையாவது  சுக்கு மிளகு குழம்பு, கண்டா திப்பிலி மற்றும் தூதுவளை  ரசம் எடுத்துக்கொள்ள வேண்டும்.  அதன் சாப்பிடும் முறை சித்தர்கள் குறியீட்டில் உள்ளன. 

‘அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்’ என்பது சித்தரத்தையின் பெருமையைச் சொல்லும் வழக்கம். சித்தரத்தையில் உள்ள வேதிப் பொருட் கள்  செயல்பட்டு உடலில் உள்ள கபத்தை வெளியேற்றும் தன்மை கொண்டது. சித்தரத்தை, அதிமதுரம், திப்பிலி, மிளகு ஆகியவற்றை நன்றாக அரைத்து, தண்ணீரிலிட்டு நுரை பொங்கக் கொதிக்கவைத்து, தேனும் பனைவெல்லமும் கலந்து குடிக்க, மாற்றத்தை விரைவில் உணரலாம். வெளிப்புற கபத்திற்கு தேங்காய் எண்ணெய்யைக் கற்பூரம் சேர்த்துச் சுடவைத்து நெஞ்சில் தடவினால், நெஞ்சுச் சளி குணமாகும்.

பாலரிஷ்ட தோஷம் வருவதற்கு சந்திரனின் நிலை முதன்மையானது என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. சந்திரனின் பலம்/பலவீனம், சுப அசுப தன்மைகள் ஒரு குழந்தையின் பாலரிஷ்ட தோஷத்தில் அமைந்துள்ளது. அதற்கான பரிகாரம் மற்றும் சந்திர பலம் கூட்டும் முறையில் உணவுகளைக் கொடுத்து  குழந்தைக்கு  நோய் எதிர்ப்புச் சக்தி அதிகப்படுத்த வேண்டும்.

சூரியன் பூமி சந்திரன் ஒரேகோட்டில் வரும்பொழுது சந்திரன் ஒளி மறைக்கப்படும்,  அதிலும் பௌர்ணமி தினத்தில் சந்திரனின் ஈர்ப்பு விசையின் தாக்கமும், கெட்ட கதிர்வீச்சும்  பூமியின் மேல் அதிகம் இருப்பதால், கருவுற்ற பெண்கள் சந்திர கிரகண நேரத்தில் வெளியில் வராமல் மற்றும் எந்த காரியமும் செய்யாமல் இருக்க வேண்டும். பிறகு சந்திர கிரகணம் முடிந்த பிறகு குளித்து சுத்தபத்தமாக  கடவுளை பிரார்த்தனை செய்யவேண்டும்.  குழந்தையின் உடல் பாதிப்பு குறையும்.
 
செவ்வாய்

மனித உடலில் ரத்த மண்டலத்தை இயக்கும் ரத்த காரகனாகச்  செவ்வாய் பகவான் பூமாதேவியின் மகனாவான். இவருக்கு ரத்தகாரகன் என்ற பெயருக்கு காரணம் ஒரு கதை உண்டு.  அந்தகாசுரன் என்ற அரக்கன் சிவனுடன் யுத்தம் புரிந்தான்  பல ஆண்டுகாலமாக நீடித்தது. போர் முடிவடையும் நேரத்தில் சிவபெருமானின் உடலிலிருந்து வியர்வையின் சொட்டுகள் நிலத்தில் விழுந்தன அதிலிருந்து செவ்வாய் கிரகம் பிறந்தது என்று கூறப்படுகிறது. அந்தகாசுரனின் ரத்தத் துளிகளை செவ்வாய் உள்வாங்கியதால் செவ்வாயானவர் ரத்தகாரகனாக சிவப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது. 

செவ்வாய் தாக்கம் உள்ள ஜாதகர்கள் பார்த்தால் தெரியும் இவர்கள் தான் என்ன நினைக்கின்றார்களோ அவற்றை நொடிப்பொழுதில் சடக்கென்று செயல்படுத்திவிடுவார்கள். இவர்கள் லக்கினபடி பார்த்தால்  மேஷ , விருச்சிக, மகரம் (உச்சம் பெற்ற கிரகம்)  ராசிக்காரர்களாக செவ்வாய் நிலையானது அதிக பலத்துடன்,  கம்பீர தோற்றதுடன், உஷ்னமுடையனாகவும், செயலில் திடமாக, சுறுசுறுப்பாகவும்,  உடலில் வீரியத்தைக் கொண்டவனாக இருப்பார்கள். இவர்கள் மூளை அதிக பரபரப்பாக இருக்கும் அதனால் தான் இவர்கள் அறிவியல்  ஆராய்ச்சியில் அதிக நாட்டம் இருந்துகொண்டிருக்கும் அதுவும் அந்தந்த பாவத்தைப் பொறுத்து தொழில் அமையும். 
செவ்வாய் காரகன் உடலில் பித்தம் ஏற்படுத்த கூடியனவாக மற்றும் நெருப்புத்தன்மை கொண்ட கிரகம். செவ்வாய் என்பவர் உடலின் மின்சாரம் கொண்ட தாமிரம் என்று கூட கூறலாம். இவரால்தான் உடலுக்குத் தேவையான தாமிர சக்திமூலம் வெப்பம் தாக்கம் கொண்டு  பசி, தாகம், ஜீரணம்,தெளிவு, நினைவாற்றல், என்று பல இயக்கங்களுக்குக் காரண கர்த்தாவாகத் திகழ்கிறார்.

செவ்வாயினால் உடலில் உருவாக்கப்படும் நோய்கள்
உடலில் பித்தத்தின் அளவு சரியான விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும். நம் உடலில் பித்த அளவு  அதிகமாக திகழும் பொழுது உஷ்ணத்தால் ஒவ்வொருவருக்கும்  நோயின் தாக்கம் மற்றும் உடலின் உள்ள கூறுகள் மாறுபாட்டினை கொண்டு வரும். இந்த தாக்கத்தில் ஏற்படும் நோய்கள்:- சுட்டுக்கட்டி, நெஞ்செரிச்சல், ரத்தஅழுத்தம், தொண்டை எரிச்சல், மூட்டுவலி, நீர்க்கடுப்பு, மூலம், அலர்ஜி, நமைச்சல், அரிப்பு, அம்மை, அல்சர் என்னும் குடல் புண், கட்டி, கொப்புளம், ரத்த அழுத்தம், தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, படபடப்பு,  பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், சூட்டின் தாக்கத்தால் கரு களைந்து போகுதல், ரத்த அழுத்தத்தால் குறை பிரசவம் என்று அடுக்கிக்கொண்டு போகலாம். அதுவும் செவ்வாய் ஆதிக்கம்  உள்ள நபர்களுக்கு செவ்வாய் திசை ராகு புத்தி லக்கினாதிபதி தொடர்பு வந்தால் மூளை பாதிப்பு மற்றும் ரத்தக் கொதிப்பால் மூளை சிதைவு  ஏற்படும்.

செவ்வாயால் ஏற்படும் மற்ற நோய்கள்  ரத்த அணுக்கள் குறை பாடு, கல்லீரல் மூலம் உண்டாகும் நோய், ஆயுதங்களால் உடல் சிதைவு, எலும்பு மச்சை பிரச்சனை , மஞ்சள் காமாலை, ரத்தம் போக்கு, பெண்களின்  மாத விடாய் பிரச்சனை மற்றும் பல்வேறு நோய்கள் , ரத்த புற்றுநோய் (ராகு சேர்ந்தால்), விபத்தால் உண்டாகும் உடல் பாதிப்பு (செவ்வாய் தசை புத்தி காலங்களில்), மண்ணீரல் வேலை செய்யாமல் போகுதல் (கிருமிகளை எதிர்த்துப் போராடி, வடிகட்டி ரத்தத்தை மறுசுழற்சி செய்யும்) ,  ஏற்படுவது, கெட்டுப்போன உணவால் ஏற்படும் நோய்கள், வெட்டுக்காயங்கள், பித்த நோய்கள், குடும்ப நோய்கள், தீக்காயங்கள், மருந்துப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு, பூப்பெய்தல் நடைபெறாமல் இருப்பது, ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுகள், பற்கள் பாதிப்பு,  ரத்த புற்றுநோய் (ராகு), தொழுநோய், இன்னும் பல நோய்கள் மற்ற கிரகங்களோடு மாறுபடும்.

சுக்கிரனோடு செவ்வாய் தொடர்பு, தசாபுத்தி  மற்றும் ராகு பார்வை பலம் பெற்று 1 ,4 (கற்பு), 8 (நீடித்த பாதிப்பு)  பாவத்தில் பாதிப்பு பெற்றால்  உயிர்க்கொல்லி நோய் ஏற்படும். மரணம் என்று சொல்லும்பொழுது ஆயுட் பாவம் பார்க்கவேண்டும். செவ்வாய் அல்லது சுக்கிரன் குருவின் சாரம் மற்றும் பார்வை பெற்றால் இந்த பாதிப்பு நிகழாமல் தப்பிக்கலாம்.

ஜாதகத்தில் செவ்வாய் நிற்கும் ராசிகள் மற்றும் பாவத்திற்கு ஏற்ப உடல் பாகங்களில் ஏதாவது ஒரு நோய் இருக்கும். அதுவும் சனியோடு கூடினால் நோய் தாக்கம் அதிகப்படுத்தும்.

தீர்வு
 
செவ்வாய் பலம் மற்றும் பித்தம் அதிகம் உள்ளவர்கள் வெள்ளரிக்காய், சிகப்பு மற்றும் வெந்தய கீரை, இளநீர், எள்ளு, எல்லா வகை பழங்களும், சர்க்கரை, தேன், புடலை, கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி, இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம். விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் உடலில் உட்கொண்டு வேண்டாத நச்சு (toxic) மலம் வழியாகக் வெளியேற்ற வேண்டும். சூட்டை தணிக்க கூடிய மற்ற முக்கிய வேர்களான வெட்டிவேர், விளாமிச்சைவேர், கரும்புவேர் போட்டு ஊறிய பானைத் தண்ணீரை குடிக்கப் பயன்படுத்துதல், குளிர்ந்த நீரில் குளித்தல், நெற்றியில் தூய திருநீறு மற்றும் சந்தனத்தை இட்டுக் கொள்ளுதல் என்பது அவசியம்.  

பெண்கள் செவ்வாய் தாக்கம் உள்ள மங்கள காரகன் குணம் கொண்ட மஞ்சள், மருதாணி கைகளில் உள்ளங் கால்களில் போட்டுக்கொள்ள வேண்டும். பித்தம் கொஞ்ச கொஞ்சமாக உடலில் இருந்து குறைக்கப்படும். அஷ்டவர்க்கத்தில் செவ்வாய் பலம் குறைந்தவர்கள் செவ்வாழை, குதிரை வாலி, பூண்டு, மாதுளை பேரீச்சை, அகத்தி கீரை, கோதுமை, அரிசி, துவரம் பருப்பு, தானிய கூழ், நெல்லிக்காய், பிரண்டை, நார்ச்சத்து உணவுகள், ஒமேகா வகை உணவுகள் என்று உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பித்தத்தைத் தூண்டும் காரம், மேற்கு நாட்டு உணவுப் பழக்கங்கள் மற்றும் மசாலாப் பொருட்கள், புலால் உணவு, மதுபானம், பாக்கு, சிகரெட், குட்கா, காபி தேனீர் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உணவில் அதிக எண்ணெய் உப்பு குறைத்துக் கொண்டால் பித்தம் தலைக்கு மற்றும் உடலில் ஏற்படாது.

சில ஜாதகத்தில் வலு அதிகமாக உள்ள சுக்கிரனோடு செவ்வாய் தொடர்பு பெற்றவர்கள் அதன் தசாபுத்தி காலங்களில் தன் மனதை மற்றும் ஆன்மீகம் மற்றும் யோகாவில் மனதைச் செலுத்தவேண்டும். அப்பொழுது நமக்குக் கெட்ட எண்ணங்கள் செயல்கள் நடைபெறாது.

திருமணப் பந்தத்திற்கு முக்கிய காரகன் சுக்கிரன் மற்றும் செவ்வாய் மிகவும் முக்கியம். இவற்றில் பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு ரத்தம் அணுக்களின் எண்ணிக்கை, வேகமும் அதிகப்படும் அதனால் தான் ஆண், பெண் இருவருக்கும் செவ்வாய் தோஷம் உள்ளவர்களைப் பார்த்து திருமணம் முடிப்பார்கள். அப்பொழுது அவர்கள் திருமணத்திற்குப் பிறகு ஒத்துப்போவார்கள்.

செம்பு பாத்திரத்தில் உணவு சமைத்தல், நீர் அருந்துதல் என்று இக்காலத்தை மாற்ற வேண்டும். இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் ஒழித்துச் செப்பு பாத்திரங்களை வாங்கி தலைமுறைகளைச் செழிக்க வைப்போம். மற்ற கிரகங்களின் நோயின் தாக்கம் மற்றும் சுலப தீர்வு வரும் பகுதிகளில் பார்ப்போம்.

குருவே சரணம்

- ஜோதிட சிரோன்மணி பார்வதி தேவி

தொலைபேசி : 8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com