காஞ்சிபுரத்தில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் அத்தி வரதரைத் தரிசிக்க வந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த 17 நாள்களில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர்.
அத்திகிரி அருளாளன் பற்றி அறியப்படாத சில தகவல்கள்!
தொடர்ந்து 18-ம் நாளில் அத்திவரதர் கத்திரிப்பூ நிற பட்டாடை அணிந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், அத்திவரதரை தரிசிக்க வந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திடீரென கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மாவட்டம் ஆட்சியர் பொன்னையன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தபோது,
அத்திவரதர் தரிசனம் 17-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சற்றுமுன் தொலைக்காட்சியில் திடீரென சுமார் 100-க்கு மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்ததாகத் தகவல் வெளியானது. அது முற்றிலும் தவறான தகவலாகும். தெற்கு மாட விதியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் கடந்த ஜூலை 1 முதல் இதுவரை 100 பேருக்கு மருத்துவ முகாமில் ஓ.ஆர்.எஸ் கரைசல் கொடுக்கப்பட்டு சிகிச்சையாக்கப்பட்டது.
இந்த தகவல், மறுவி 100 பேர் மயக்கமடைந்தனர் என்ற தவறான தகவல் மக்களிடையே ஊடகங்களில் பரவியுள்ளது. கோயில் சுற்றுவட்டாரத்தில் 14 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. சின்டெக்ஸ் டேங் வைத்து ஓ.ஆர்.எஸ் கரைசல் மக்களுக்கு வழங்கப்படுகிறது. பொதுமக்களிடையே தவறான வதந்தி பரப்பப்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் இதை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.