அத்திவரதரை தரிசிக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடு விதித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்திவரதர் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். தொடர்ந்து ஆகஸ்ட் 17-ம் தேதி வரை பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
அத்திவரதர் பெருவிழாவையொட்டி லட்சக்கணக்கானோர் வருகையால் காஞ்சிபுரம் நகரமே திணறி வருகிறது. விழாவின் 19-ம் நாளான இன்றும் கனிசமாக கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. சந்திரகிரகணத்தை முன்னிட்டு அத்திவரதரை தரிசிக்கப் பக்தர்கள் பலர் வராத நிலையில், நேற்று திடீரென மக்கள் அலை அலையாகத் திரண்டதால், காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலை உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அத்திவரதர் பற்றி அறியப்படாத சில தகவல்கள்!
வெளியூரிலிருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்ததால் உள்ளூர் மக்களுக்கும், காஞ்சிபுரத்தில் வந்து தங்கியவர்களுக்கும் நேற்று ஒருநாள் மட்டும் தரிசனம் செய்ய வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் வந்ததால் கூட்ட நெரிசல் சிக்கி பலர் மயக்கமடைந்தனர். மயக்கமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எனவே, இந்தமாதிரியான அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் சார்ப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், அத்திவரதர் எழுந்தருளியுள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று முதல் அத்திவரதரை மட்டும் தான் தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாகவும், மூலவரான வரதராஜப் பெருமாளை தரிசிக்க அனுமதி ரத்து செய்துள்ளதாகவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.