காஞ்சிபுரம் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பது திட்டமிட்டபடி நாளை மறுநாள் தொடங்க வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் அத்திவரதர் தொடர்ந்து 23-வது நாளான இன்று இளம் பச்சை வண்ணப் பட்டு உடுத்தி மகிழம்பூ மாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தொடர்ந்து ஆகஸ்ட் 17-ம் தேதி வரை அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
கடந்த 22 நாட்களில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து மகிழ்ந்தனர். ஆகம விதிப்படி அத்திவரதர், 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சியளிப்பார். இதனைத் தொடர்ந்து நின்ற கோலத்தில் அத்திவரத பெருமாளைத் தரிசிக்கப் பக்தர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், திட்டமிட்டபடி நாளை மறுநாள் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சிதருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கிறது.
அத்திவரதர் பற்றி அறியப்படாத சில தகவல்கள்!
ஏனெனில், கடந்த 40 ஆண்டுகளாக அத்திவரதர் சிலை தண்ணீரில் இருந்ததால், சிலையின் உறுதித்தன்மை குறைவாக இருக்கின்றது. இதனால் நின்ற கோலத்தில் காட்சி தருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை அத்தி வரதர் நின்ற கோலத்தில் காட்சிதருவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.