அத்திவரதர் தரிசனம் 25-வது நாளான இன்று மஞ்சள் நிறப் பட்டுடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் எம்பெருமாள்.
காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் நிகழ்வு இந்தாண்டு நடைபெற்று வருகிறது. தினமும் வெளி மாவட்டங்கள் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசித்துச் செல்கின்றனர்.
அத்திவரதர் பெருவிழாவில் 24 நாள்கள் நிறைவடைந்த நிலையில், நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றது. விழாவின் 25-ம் நாளான இன்று மஞ்சள் பட்டுடுத்தி பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார்.
இன்று காலை முதல் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பக்தர்களுக்கு வசதியாக வரிசைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.