காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் வஸந்தமண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் அத்திவரதரை தரிசிக்கும் நேரத்தில் நாளை (31.07.19) மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆதி அத்திவரதர் கடந்த 30 நாட்களாக சயன கோலத்தில் காட்சியளித்து வருகிறார். தொடர்ந்து, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க உள்ளார். எனவே, அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அத்திவரதரை நின்ற கோலத்தில் காட்சியளிக்க வைக்கும் பணிகளுக்காக ஜூலை 31-ம் தேதி பகல் 12.00 வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். மேலும், தேவராஜ பெருமாள் கோயிலின் கிழக்கு கோபுர வாசல் 12 மணிக்கு அடைக்கப்படும்.
சயன கோலத்தில் வீற்றிருக்கும் அத்தி வரதரை தரிசனம் செய்ய கிழக்கு கோபுரம் வாசல் வழியாக இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 12 மணிக்குள் வந்தால் மட்டுமே மாலை 5.00 மணி வரை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். விஐபி பாஸ் வைத்துள்ளவர்கள் மாலை 3.00 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தகவல் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அத்திவரதரை நின்ற கோலத்தில் காணத் திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூடுதலாக மூன்றாயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.