திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யப் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏழுமலையானைத் தரிசிக்க திருமலைக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகக் கோடை விடுமுறை காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கோடை விடுமுறை முடியும் நிலையில் திருப்பதி திருமலையில் கடந்த 2 நாட்களாகப் பக்தர்களின் கூட்டம் பலமடங்கு அதிகரித்துள்ளதால், இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய, 26 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் காத்திருப்பு அறையில் நிற்கும் பக்தர்களுக்குத் தேவஸ்தானம் சார்ப்பில் நீர் மோர், உணவுகள் வழங்கப்பட்டது. அதேபோல், ஆங்காங்கே நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1 லட்சம் பேர் ஏழுமலையானைத் தரிசனம் செய்துள்ளனர். இதனால், உண்டியல் வருமானம் 2 கோடியே 56 லட்சம் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளது.