வியாழ பகவான் என்றும், பிரகஸ்பதி என்றும் குரு பகவானுக்குப் பெயர்கள் உண்டு. நுண்ணறிவு படைத்த மாமேதை என்பதால் குரு பகவான் பிரகஸ்பதி எனப் பெருமையாகக் குறிப்பிடப்படுகிறார். தேவர்களின் குருவாகத் திகழ்ந்தவர் என்ற காரணத்தால் குரு என்ற சிறப்புப் பெயரால் இவர் அழைக்கப்படுகிறார்.
நறைசொரி கற்பகம் பொன்னாட்டினுக் கதிபனாகி
நிறைதனம் சிவிகைமன்னில் நீடுபோகத்தை நல்கும்
இறை யவன் குரு வியாழன் இரு மலர்ப் பாதம் போற்றி
என மக்கள் குரு பகவானைப் போற்றித் துதிக்கின்றன. குரு பகவான் இறைவனைப் பூஜித்த திருத்தலங்கள் மூன்று,
1. தென் குடித் திட்டை
2. திருவலி தாயம்
3. திருச்செந்தூர் ஆகியன.
தென்குடித்திட்டை என்ற திருத்தலம் தஞ்சையிலிருந்து மாயவரம் செல்லும் ரயில் பாதையில் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சென்னையில் இன்று பாடி என அழைக்கும் இடந்தான் திருவலிதாயம் என்ற திருத்தலமாகும்.
திருச்சீரலைவாய் என நக்கீரரால் அழைக்கப்பெற்ற திருச்செந்தூர் என்ற முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்று கீழ்க் கடற்கரைக் கோடியில் அமைந்திருக்கும்
திருச்செந்தூர் ஒரு ரயில் நிலையமாகும். திருநெல்வேலியிலிருந்து இத்தலத்தை ரயில் மூலமாகவும் பேருந்து மூலமாகவும் அடையலாம்.
கல்வி, செல்வம், தம்பதியர் ஒற்றுமை, குழந்தைப்பேறு கிடைக்க வியாழக்கிழமைகளில் குருபகவான் காயத்திரியைக் கூறி, கொண்டைக் கடலை மாலையைச் சாற்றி வந்தால் குரு பகவானின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.