கோயிலில் நெய் விளக்கு ஏற்றுபவர்கள் இதைப் படிக்கவும்!

நெய் தீபம் எனும் பெயரில் பொய் தீபம் ஆலயங்களில் நடக்கும் நெய் தீப ஊழல் பற்றி ஒரு சின்ன தகவல் பார்ப்போம்.
கோயிலில் நெய் விளக்கு ஏற்றுபவர்கள் இதைப் படிக்கவும்!

நெய் தீபம் எனும் பெயரில் பொய் தீபம் ஆலயங்களில் நடக்கும் நெய் தீப ஊழல் பற்றி ஒரு சின்ன தகவல் பார்ப்போம். 

ஆலயங்களில், அறநிலையத்துறையின் அனுமதியோடு, ஏலம் மூலம் நிபந்தனையின் பேரில், வியாபார நோக்கத்தில் விற்கப்படும், போலியான நெய் விளக்குகள், அதன் வியாபார நுணுக்கங்கள் பற்றிய ஒரு பதிவுதான் இது. 

இன்று ஆலயங்களில் விற்கப்படும் நெய் விளக்கு தயாராகும் முறை பற்றிப் பார்ப்போம்:

அந்த விளக்குகளில் நிரப்பப்படும் “நெய்” போன்ற நிறம், தோற்றம் கொண்ட திடமான “பசை”யானது, சைவ மற்றும் அசைவ உணவகங்களில் உபயோகப்படுத்தப்பட்ட, எண்ணெய்களை இலவசமாகவோ, மிகக் குறைந்த விலையிலோ வாங்கி, அதை வடிகட்டி, மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்து, அதில் மரவள்ளிக்கிழங்கு மாவு, டால்டா, மெழுகு மற்றும் பசைமாவு, மஞ்சள் நிறத்திற்காக வண்ணப் பொடியினை கலந்து விளக்குகளில் அடைத்து,”நெய் விளக்கு” என்று, பொய் சொல்லி, பொய்யான “பசை விளக்கினை” பொது மக்களின் பணத்தினை குறிவைத்து விற்பனை செய்து, கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கின்றார்கள்.

முதலில் இந்த கடைகளில் உள்ள நெய்விளக்குகளை ஒருநாளாவது முகர்ந்து பார்த்து இருக்கின்றீர்களா? ஒரு நெய் விளக்கு "3 ரூபாயில்" ஏற்ற முடியுமா? இன்றைய நாளில், ஒரு கிலோ “தூய பசு நெய்யின்” விலை 1 கிலோ, 450 முதல் 550 ரூபாய் வரை. ஒரு கிலோ பசு நெய்யில், அதிகபட்சமாக 75 விளக்குகளை ஏற்றுவதாக வைத்துக் கொண்டாலும், விளக்கு மற்றும் திரி உள்பட குறைந்தது 6.50 ரூபாய் செலவாகும். ஆனால் 10 ரூபாய்க்கு 3 நெய் விளக்கு எப்படி, ஆலயங்களில் இவர்களால் விற்கப்படுகிறது?

உண்மையான பசு நெய் கொண்டு, ஏற்றப்படும் விளக்கின் ஒளி, ஒரே சீராக வெள்ளை ஒளியாக, நறுமணத்தோடு இருக்கும். அந்த ஒளி வெள்ளத்தில், அந்த இடத்தில் உள்ள காற்று தூய்மையாகி, பிராண வாயு சுத்தமாகக் கிடைக்கும். ஆனால் இந்தமாதிரி, தரமற்ற “பசை விளக்குகள்” சரிவர எறிவதும் இல்லை, அதோடு ஒருவித நாற்றமும் அடிக்கிறது. வருடம் முழுவதும் கொளுத்தும் 100 டிகிரி வெய்யிலில் நமது உடம்பே உருகி விடும்போது இருக்கின்ற நிலையில், இந்த “பசை விளக்குகள்” அக்னி வெய்யிலில் கூட உருகாமல், கல்லுமாதிரி இருப்பதைக் கவனியுங்கள்.

முன்பு எல்லாம் மக்கள் தங்களின் வீடுகளில், பசுவினை வளர்த்து, அதன் பாலில் இருந்து, தயிர், வெண்ணெய், நெய் முதலானவற்றை ஆலயங்களில் உள்ள இறைவனுக்கு உபயோகப் படுத்தினார்கள். பின்னர், கால ஓட்டத்தின் காரணமாக, கடைகளிலிருந்து "வெண்ணெய்" வாங்கி காய்ச்சி, உருக்கி, அதிலிருந்து நெய்யை உபயோகப்படுத்தினார்கள். பின்னர் கடைகளில் "பசு நெய்" வாங்கி விளக்கு ஏற்றினார்கள். நாள்படப் பசு நெய் என்பது மறைந்து, பல வண்ண டப்பாக்களில், பல வித பெயர்களில் கடைகளில் விற்கப்படுகின்ற "நெய்யினைக்" கொண்டு விளக்கேற்றினார்கள். 

original ghee
original ghee

ஆனால் தற்பொழுது, நெய் வாங்கி விளக்கு ஏற்றுவதை மறந்து, சோம்பலின் காரணமாகவும், வசதியின் பொருட்டும், தற்பொழுது ஆலயங்களில், “நெய் தீபம்” என்ற பெயரில் விற்கப்படும், “பசை விளக்குகளை... கோயிலின் உள்ளே கடைவிரித்து ஏமாற்றுகின்ற போலி வியாபாரிகள் கொள்ளையடிக்க நெய் விளக்கு என்ற பெயரில், விலை கொடுத்துப் பொய் விளக்கை வாங்கி, கோயிலில் ஏற்றிவிட்டு, விளக்கு ஏற்றும்போது கைகளில் பட்டுவிட்ட, நாற்றம் பிடித்த “பசையினை” கோயில் தூண்களில் தடவி கோயிலையும் நாறடித்துவிட்டுப் போவது அல்ல பக்தி என்பதை நினைவில் கொள்ளுங்கள், நாம் கோயிலுக்குச் செல்வதே பாவங்களைத் தொலைக்கத்தான். அப்படி இருக்க இந்தமாதிரி போலியான பொய் விளக்குகளை” வாங்கி, மேலும் மேலும் பாவச் செயல்களைச் செய்ய வேண்டாம்.

நம்முடைய இயலாமை, சோம்பேறித்தனம், மற்றும் பணத்தினை கொண்டு அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம் என்ற தவறான சிந்தனை ஒன்றே இன்று ஆலயங்களில் கூட, அநியாயங்கள் அளவின்றி நடைபெறக் காரணமாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேற்கூறிய அனைத்து விவரங்களும் நல்லெண்ணெய் விளக்கேற்றுதலுக்கும் பொருந்தும்.

பொய் விளக்கேற்றி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள் உறவுகளே!

ஏமாற்றுபவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com