திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நடைபெறும் பிரமோற்சவத்தையொட்டி, உன்மத்த நடனத்தில் செண்பக தியாகராஜ சுவாமி யதாஸ்தானம் எழுந்தருளும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவம் மே 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நிகழ்ச்சியாக விநாயகர் உற்சவம், சுப்ரமணியர் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சிகளின் தொடக்கமாக கடந்த 4-ஆம் தேதி அடியார்கள் நால்வரான திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் உற்சவம் தொடங்கியது. 5-ஆம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் நான்கு மாட வீதியுலா நடைபெற்றது. 6-ஆம் தேதி காலையுடன் இந்த உற்சவம் நிறைவுபெற்றது.
உன்மத்த நடனம்: பாரம்பரிய முறைப்படி வியாழக்கிழமை இரவு உன்மத்த நடன நிகழ்வு தொடங்கியது. தியாகராஜரும், நீலோத்பாலாம்பாளும் (உன்மத்த நடனம்) யதாஸ்தானத்திலிருந்து வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினர். இரவு முழுவதும் அங்கிருந்த தியாகராஜருக்கு வெள்ளிக்கிழமை காலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டன. பிறகு வசந்த மண்டபத்திலிருந்து தியாகராஜர் ஆடியபடி யதாஸ்தானம் கொண்டு செல்லப்பட்டார். தியாகராஜராட்டம் என்பது சுவாமியை இடது, வலது புறமாக சாய்த்து ஆட்டியபடி கொண்டுசெல்வதாகும். இதற்காக பிரத்யேகப் பயிற்சி பெற்றவர்கள் சுவாமியை தோளில் சுமந்து ஆடியபடி யதாஸ்தானம் சென்றடைந்தனர்.
பிராகாரத்திலிருந்து யதாஸ்தானம் திரும்பும்போது ஒற்றை மணி அடிக்கப்பட்டது. அதேநேரத்தில் மூலவரான தர்பாரண்யேஸ்வரருக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், நிர்வாக அதிகாரி (கோயில்கள்) ஜெ. சுந்தர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.