அண்டத்தையும் பிண்டத்தையும் இணைப்பது தொண்டம் என்று ஶ்ரீவித்யையில் குறிப்பிடுவார்கள். அதுபோல அண்டத்தையும் பிண்டத்தையும் இணைக்கும் தொண்டனாக யோகம் திகழ்கிறது.
உச்சியில், கயிலாய மலைமேல் இருக்கும் பரத்தை அடைய மலையைச் சுற்றிலும் பலவழிகள். எல்லாம் மலைக்கு மேலேதான் சென்று சேருகின்றன. அதைப் போலவே யோகங்களும் பல விதமாக இருந்தாலும் பயன் ஒன்றுதான்.
ஏன் அப்படி? என்ற கேள்வி கேட்பவர்களுக்கு, ஒன்றைச் சொல்வேன்.
என்னவென்றால் இறையாற்றலாகிய இயற்கை பலவித பரிமாணங்களில் விரிந்து பரிணமித்திருப்பதால், அதில் எந்த விஷயத்தின் உள்ளே நீங்கள் மனதினால் சங்கமித்தாலும், இறைவனை அடையலாம்.
எனவேதான் கல்லிலும் கடவுளைக் கண்டு முக்தி அடைந்த ஞானிகளையும் காண்கிறோம். மன ஒருமைப்பாட்டுடன் உலகில் எந்த விஷயத்தைத்தொட்டாலும் இறையாற்றல் உங்களை உறிஞ்சி எடுத்து தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்ளும்.
வேதாத்ரியத்தில் பஞ்சபூத நவக்கிரக தவம் என்று ஒரு தவமுறையைக் கற்றுத் தருவார்கள். அதை முறையாகத் தவறாமல் கடைபிடித்து சில இக்கட்டான நேரங்களில் நாம் சௌகர்யம் அடையாளம். இது பலர் அனுபவம். இதைப்போல நம் முன்னோர்கள் அண்டத்தில் உள்ள பஞ்ச பூதங்களையும், பிண்டத்தில் உள்ள பஞ்ச பூதங்களையும் இணைத்து தியானிப்பார்கள். இதை பஞ்ச பூத தியானம் (அ) பரந்த தியானம் என்பார்கள்.
நம் உடலில் உள்ள பஞ்ச பூதங்களினால் விளையும் உணர்ச்சிகளை அதன் போக்கில் விடாமல் கட்டுப்படுத்தி வெற்றி கொண்டோமானால், அண்டத்தின் இயற்கை சக்திகளை நம் விருப்பம் போல கையாளலாம். அந்த ஆற்றல் வந்து விடும். அதை அஷ்டமகா சித்தி என்பார்கள்.
- கோவை பாலகிருஷ்ணன்