திருமலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) நேர ஒதுக்கீடு மற்றும் திவ்ய தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்தும் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வார இறுதி விடுமுறை நாள்களில் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக 26 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திருமலையில் போக சீனிவாசமூர்த்திக்கு ஞாயிற்றுக்கிழமை சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெற உள்ளது. ஏழுமலையான் கோயில் தங்க வாயிலில் 3 மணிநேரத்துக்கு இந்த அபிஷேகம் நடத்தப்படும். எனவே அன்று நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கு அளிக்கப்படும் திவ்ய தரிசனத்தையும், தர்ம தரிசன பக்தர்களுக்காக வழங்கப்படும் நேர ஒதுக்கீட்டு தரிசனத்தையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதை பக்தர்கள் கவனத்தில் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.