ஒரு ஜாதகர் பெறும் சொத்து பற்றி அறிய முதலில் அடிப்படை விதிகள் நாம் அறிவோம். ராசி சக்கரத்தின் (D-1) நான்காம் வீடும் அதன் அதிபதி பற்றியும், அவைகளின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் பரிசோதிக்க வேண்டும். இதிலிருந்து ஒரு ஜாதகர், பொதுவாக ஒரு சொத்தின் மூலம் மகிழ்வு பெறுவாரா மாட்டாரா என்பதனைக் காண முடியும். D-1ன், நான்காம் அதிபதி, பலம் இழந்தோ அல்லது நான்காம் வீட்டில் இயற்கை பாபர்களோ (சூரியன், செவ்வாய் சனி, ராகு) அல்லது லக்கின பாபர்களோ (6, 8, 12ஆம் அதிபதிகள், பாதகாதிபதி, மாரகாதிபதி அல்லது நீச்ச கிரகம் வீற்றிருப்பு போன்றவை இருப்பின், சொத்து சம்பந்தமான சில பிரச்னைகளை அளிப்பதோடு, துரதிஷ்ட சம்பவங்களின் நிகழ்வுகள் போன்றவை சொத்தின் மூலம் ஏற்பட வாய்ப்பு. இவைகள் அந்த ஜாதகரின் தசா, புத்தி காலங்களிலோ, அல்லது தசா நாதனின் வேதகனின் புத்தி, அந்தரங்களில் ஏற்படும் நிலை உண்டாகும்.
பரம்பரை சொத்து பெறும் பாக்கியம்
பரம்பரை சொத்துக்கு காரகர், சனி ஆவார். அவர், 8-ம் வீட்டிலிருந்தாலோ, அல்லது தொடர்புகொண்டாலோ அல்லது ஒரு நல்ல வீட்டில் 8-ஆம் அதிபனோடு தொடர்பு கொண்டாலோ அது ஒரு பாரம்பரிய சொத்தை பெறுவதற்கான உத்தரவாதமாகும். இது D-4 மற்றும் D-12க்கு பொருந்தும்.
மேற்கூறிய D-4 விதிகளைத் தவிர, துவாதசாம்சம் எனும் D-12ல், 8ஆம் வீட்டின் நிலையால் தந்தை மூலமாக வரும் பரம்பரை சொத்தையும், 3ஆம் வீட்டின் நிலையால், தாய் மூலமாக வரும் பரம்பரை சொத்தையும் அறியலாம். 2ஆம் வீட்டிற்கும் 8ஆம் வீட்டிற்கும் ஆன தொடர்பு மூலம் தந்தை வழியாகவும், 3ஆம் வீட்டிற்கும் 8 ஆம் வீட்டிற்கும் ஆன தொடர்பு மூலம் தாய் வழியாகவும் பெறும் சொத்தினை உறுதிப்படுத்தப்படும். மேலும், லக்கினத்திற்கு 8ஆம் வீட்டிற்குமான இணைவால், பரம்பரை சொத்து நிச்சயிக்கப்படுகிறது.
ஒரு ஜாதகருக்கு எத்தனை வீடுகள்?
இதற்கு D-4ன் லக்கினாதிபதியின் அந்தஸ்து அல்லது பலம் காண வேண்டும். எத்தனை கிரகங்கள் இந்த லக்கினாதிபதியுடன் இணைந்துள்ளனர் எனவும், எத்தனை ராசி தொடர்புகொள்கின்றன என அறியவேண்டும். இதில் முக்கியமாக ஆத்ம காரகரும், D-4ன், 4-ஆம் அதிபதிக்குமான தொடர்பினை கவனம் கொள்ளவேண்டும். நான்காம் அதிபதி, D-4ன் 4ஆம் வீட்டுடன் தொடர்பு பெற்றிருந்தால், ஒருவருக்கு மிக அருமையான வீடு எப்போதும் அமையப் பெறுவார். அதே சமயம், ஆத்ம காரகர், D-4ன் 4ஆம் வீட்டுடன் தொடர்பு பெற்றிருந்தால், ஒரு பெரிய அரண்மனையில் வசிக்க இயலும். இதே போல் ஒருவரின் ஜாதகத்தில், D-4ன் 4ஆம் வீடும் 5ஆம் வீடும் தொடர்பு பெற்றிருப்பின் அவர்கள் கூட ஒரு பெரிய வீட்டில் வசிக்க நேரிடும்.
ஜாதகத்தில், நிலம், சொத்து பெறுவதற்கான குறிப்பிடத்தக்க கிரகம் செவ்வாய் ஆவர். அதன் மேல் எழும் கட்டடம் சுக்கிரனே ஆவார். ஒரு ராசியில், நான்காம் அதிபதியின் ஒழுங்கற்ற நிலையே, ஒருவரின் சொத்து பெறும் பாக்கியம் தாற்காலிகமானதாக இருக்கச் செய்யும். எப்படி இருப்பினும், நான்காம் அதிபன், ஏதேனும் ஒரு ராசியில் உச்ச நிலை அடைந்திருப்பார் எனில், அவரே இறுதியில், சொத்து பெறும் நிலையை தீர்மானிப்பார். அப்போது, தற்காலிக நிலை ஏற்படுத்துபவை தகர்த்து எறியப் பட்டுவிடும். இவற்றைப் பற்றிய இறுதி நிலை D-4 எனும் சதுர்தாம்சத்தில் விளக்கமாகப் பரிசோதித்து முடிவு எட்டப்படும்.
சாயியை பணிவோம் அனைத்து நன்மைகளையும் அடைவோம்.
- ஜோதிட ரத்னா தையூர் சி.வே.லோகநாதன்
தொடர்புக்கு: 98407 17857