ஆரணி வரதராஜப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
ஆரணி பெரிய கடை வீதியில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா கடந்த ஜூன் 4 -ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவை முன்னிட்டு தினமும் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று, தேரில் சுவாமி எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதையடுத்து தேர் புறப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் பெரிய கடைவீதி, மண்டி வீதி, காந்தி சாலை, மார்க்கெட் சாலை, வடக்குமாட வீதி வழியாகச் சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது.