திருப்பதியை அடுத்த அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
நாராயணவனத்தில் பத்மாவதி தாயாரை திருமணம் செய்த பின், சுகப் பிரம்ம மகரிஷிக்கு தரிசனம் அளிக்க ஏழுமலையானும், பத்மாவதி தாயாரும் அப்பளாயகுண்டா பகுதிக்கு வந்ததாக ஐதீகம். திருமணம் முடிந்தவுடன் அவர்கள் முதலில் வந்து வரமருளிய தலம் இது. அதனால் இங்கு தேவஸ்தானம் இக்கோயிலை அமைத்து நித்திய கைங்கரியங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இங்குள்ள மூலவரான பிரசன்ன வெங்கடேஸ்வரர் வர முத்திரையுடன் காட்சியளிக்கிறார். எனவே இவரிடம் வரம் வாங்கிச் செல்ல பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். இக்கோயிலில் ஆர்ஜித சேவைகள் நடைபெறுகின்றன.
பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் வரும் வியாழக்கிழமை (ஜூன் 13) முதல் 21ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. இதையொட்டி கோயிலை தூய்மைப்படுத்தும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் என்ற திருப்பணி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதில் கோயில் அதிகாரிகள், திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி லட்சுமிகாந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.