வேலூர், நாட்டறம்பள்ளி அருகே மழை வேண்டி தவளைக்கு திருமணம் செய்து பெண்கள் ஒப்பாரி வைத்து வழிபாடு செய்தனர்.
மல்லகுண்டா பஞ்சாயத்துக்கு உள்பட்ட தகரகுப்பம் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால், இப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் கிணறுகள் முற்றிலும் வறண்டு விவசாயம் பாதிக்கப்பட்டது. மேலும், குடிநீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தகரகுப்பம், வேடிவட்டம், முத்தன்வட்டம், வண்டிமேடு, கவுண்டர் வட்டம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கவுண்டர் வட்டத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவர் ராமசாமி, ஊர்த் தலைவர் சாமராஜ் தலைமையில் ஒன்றுகூடி தவளைக்கு திருமணம் செய்து வைத்து பசுமாட்டுக்கு சிறப்பு பூஜை செய்தனர். மேலும், பெண்கள் ஒன்றுகூடி ஒப்பாரி பாடி விநோத வழிபாடு நடத்தினர்.