திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு, தேவஸ்தானம் வருடாந்திர தெப்போற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, வரும் 17-ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு தெப்போற்சவம் தொடங்கியது. 5 நாள்கள் நடைபெறும் இந்த தெப்போற்சவத்தின் முதல் நாளான வியாழக்கிழமை மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை தாயார் கோயிலில் உள்ள ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ண சுவாமி தெப்பத்தில் 3 முறை வலம் வந்தார்.
தெப்போற்சவத்தைக் காண பக்தர்கள் திருக்குளக்கரையில் திரண்டனர். உற்சவ மூர்த்திகள் அருகில் வந்தபோது, கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர்.
தெப்போற்சவத்தை முன்னிட்டு, திருக்குளக்கரை மின்விளக்குகளால் அழகுற அலங்கரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு மாலை வேளையில் கோயிலில் நடைபெறும் சில ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது.