ஏழுமலையான் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகத்தின் 2-ஆம் நாள் மாலை முத்துக் கவசம் அணிந்து மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார்.
ஏழுமலையானின் உற்சவரான மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கக் கவசம் களையப்பட்டு அவருக்கு வெள்ளிக்கிழமை முதல் ஜேஷ்டாபிஷேகம் நடந்து வருகிறது. அதன் 2-ஆம் நாளான சனிக்கிழமை காலை யாகம் வளர்த்து அர்ச்சகர்கள் உற்சவர்களுக்கு ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தி வைத்தனர். இதில் திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன்பின் உற்சவர்களுக்கு முத்துக் கவசம் அணிவிக்கப்பட்டது. பிறகு ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவர்கள் மாடவீதியில் வலம் வந்தனர். ஆண்டிற்கு ஒருமுறை இந்த நாளில் மட்டுமே உற்சவர்கள் முத்துக் கவசத்தில் மாடவீதியில் வலம் வருவர். உற்சவர்களைத் தரிசிக்க மாடவீதியில் பக்தர்கள் திரண்டனர்.