அத்திவரதர் பெருவிழா: அனந்தசரஸ் குளத்து நீர் 90% வெளியேற்றம்

அத்திவரதர் பெருவிழாவையொட்டி அனந்தசரஸ் குளத்து நீரை வெளியேற்றும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. 
90 சதவீத நீர் வெளியேற்றப்பட்டிருக்கும் அனந்தசரஸ் திருக்குளம்.
90 சதவீத நீர் வெளியேற்றப்பட்டிருக்கும் அனந்தசரஸ் திருக்குளம்.


அத்திவரதர் பெருவிழாவையொட்டி அனந்தசரஸ் குளத்து நீரை வெளியேற்றும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. 

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதர் பெருவிழா வரும் ஜூலை 1}ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17}ஆம் தேதி வரை 48 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. 

இதையொட்டி, அனந்தசரஸ் குளத்தில் உள்ள 4 கால் மண்டபத்துக்கு கீழ் வீற்றிருக்கும் அத்திவரதரைக் கொண்டுவருவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி, அனந்தசரஸ் குளத்திலிருக்கும் நீரை கிழக்கு கோபுரத்தையொட்டி உள்ள பொற்றாமரைக் குளத்துக்கு மாற்றும் பணிகளை ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 6} ஆம் தேதி முதல் இதுவரை பகுதிநேரமாக குளத்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது, அனந்தசரஸ் குளத்திலுள்ள நீர் 90 சதவீதம் வெளியேற்றப்பட்டுள்ளது. 

25}ஆம் தேதிக்குள்...: அனந்தசரஸ் குளத்தில் உள்ள அத்திவரதர் விக்ரகத்தை வெளியே எடுப்பதற்கு முன்பு, குளத்து நீர், அதன் சகதி உள்ளிட்டவை வெளியேற்றப்பட உள்ளன. இவை அனைத்தும் முழுமையாக வெளியேற்றப்படுவதற்கு வரும் 25}ஆம் தேதி வரை ஆகும் என்று கூறப்படுகிறது. 

அதன்பிறகு, அத்திவரதரை வெளியே கொண்டு வந்து ஆஸ்தான சடங்குகள் செய்யப்பட உள்ளன. பின்பு, அத்திவரதர் ஜூலை 1}ஆம் தேதி வஸந்த மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட உள்ளார். 

வஸந்த மண்டபத்தில் புனரமைப்புப் பணிகள் தீவிரம்

அத்திவரதர் பெருவிழாவையொட்டி வஸந்த மண்டபத்தில் புனரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

வஸந்தமண்டபத்தைச் சுற்றி தூய்மைப் பணிகள், வர்ணப் பூச்சு, விளக்குகள் பொருத்துதல், கருங்கற்களால் படித்துறை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து ஆட்சியர் பா.பொன்னையா கூறியது: 

அத்திவரதர் பெருவிழா தொடர்பாக அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அத்திவரதரைக் காண சாதாரண மற்றும் சிறப்புக் கட்டண தரிசனம், முக்கியஸ்தர்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு கோபுரம் வழியாக பக்தர்கள் நுழைய அனுமதிக்கப்பட்டு, வஸந்த மண்டபத்தில் அத்திவரதரை தரிசனம் செய்த பிறகு, மேற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் வெளியேறலாம். இதற்காக, தனித்தனி வரிசைகள் அமைக்கப்படவுள்ளன.

அத்துடன், மாற்றுத் திறனாளிகள், முதியோர் உள்ளிட்டோருக்கு தனிவரிசை அமைத்து தரிசனம் செய்விப்பதற்கு ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com