திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளில் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் வலம் வந்தார்.
திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு வருடாந்திர தெப்போற்சவம் நடந்து வருகிறது.
அதன் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பத்மாவதி தாயார் வைர, வைடூரிய ஆபரணங்கள், பட்டாடை அணிந்து கொண்டு மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அழகுற அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் 3 முறை வலம் வந்தார்.
அவரை தரிசிப்பதற்கு பக்தர்கள் திருக்குளக்கரையில் திரண்டனர். தாயார் அருகில் வந்தபோது கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கினர்.
தெப்போற்சவத்திற்காக திருக்குளக்கரை அழகுற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. பக்தர்களுக்காக திருக்குளக்கரையில் ஆன்மிக நிகழ்ச்சிகளையும் தேவஸ்தானம் நடத்தியது. இவ்வுற்சவத்தை முன்னிட்டு மாலை வேளையில் கோயிலில் நடைபெறும் சில ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது. பௌர்ணமி நாளான திங்கள்கிழமையுடன் தெப்போற்சவம் நிறைவு பெற உள்ளது.