திருப்பதியை அடுத்த அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாள் காலை கல்பவிருட்ச வாகனத்தில் பிரசன்ன வெங்கடேஸ்வரர் மாடவீதியில் வலம் வந்தார்.
இக்கோயிலில் வியாழக்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதன் 4ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை பிரசன்ன வெங்கடேஸ்வரர் கல்பவிருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தார்.
மாடவீதி வலம் முடிந்த பின் உற்சவர்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. மாலை ஊஞ்சல்சேவையும் நடத்தப்பட்டது. இரவு 8 மணிக்கு சர்வபூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பிரசன்ன வெங்கடேஸ்வரர் மாடவீதியில் வலம் வந்தார். வாகன சேவையைக் காண பக்தர்கள் கோயில் முன் திரண்டனர். அவர்கள் வாகன சேவைக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கினர். வாகன சேவையின் முன் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.