மழை வேண்டி, திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் ஞாயிற்றுக்கிழமை 12 மணி நேர சிறப்பு அகண்ட நாம ஜப வேள்வி நடைபெற்றது.
தமிழகத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்னை தீரவும், விவசாயிகளின் நலன் வேண்டியும், மாநிலத்தில் பரவலாக மழை பெய்ய வேண்டியும், ஆஸ்ரம வளாகத்தில் காலை 6 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை இந்த ஜப வேள்வி நடைபெற்றது.
ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் உருவச் சிலையை ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் வலம் வந்து, பகவானின் நாமத்தை ஜபித்தபடி ஜப வேள்வியில் ஈடுபட்டனர்.
மாலை 4 மணிக்கு மேல் வேள்வியில் பங்கேற்ற பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. பல ஆயிரம் பக்தர்கள் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் நாமத்தை ஜபித்தபடி வலம் வந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆஸ்ரமத் தலைவரும் நீதியரசருமான டி.எஸ்.அருணாசலம், அறங்காவலர்கள் டி.எஸ்.ராமநாதன், மா தேவகி, மதர் விஜயலட்சுமி, பி.ஏ.ஜி.குமரன், ஜி.சுவாமிநாதன், ஜி.ராஜேஸ்வரி, டி.கணபதி சுப்பிரமணியன், ஆஸ்ரமத் தன்னார்வலர் ஆர்.எஸ்.இந்திரஜித் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.