அத்திவரதர்: காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசனம்

அத்திவரதர் பெருவிழாவையொட்டி, வெளியூர் பக்தர்கள் அத்திவரதரை நாள்தோறும் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை  தரிசனம் செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். 
அத்திவரதர்: காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசனம்


காஞ்சிபுரம்: அத்திவரதர் பெருவிழாவையொட்டி, வெளியூர் பக்தர்கள் அத்திவரதரை நாள்தோறும் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை  தரிசனம் செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா வரும் ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 17-ஆம் தேதிவரை விமரிசையாக நடைபெறவுள்ளது. இதற்காக, முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

தரிசன நேரம்: அத்திவரதரை ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை காலை 5 மணி முதல் மாலை 5 மணிவரை வெளியூர் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். பொது தரிசனம், சிறப்பு தரிசனம், மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கென மொத்தம் 3 வரிசைகள் அமைக்கப்படவுள்ளன. 

இதில், பொது தரிசனம், மாற்றுத் திறனாளிகள் - முதியோருக்கான தரிசன வரிசை இலவசமாக அனுமதிக்கப்படும். சிறப்பு தரிசனத்துக்கு ரூ.50 செலுத்த வேண்டும். சகஸ்ரநாம பூஜை தரிசனத்துக்கு மட்டும் ரூ.500 செலுத்தி அத்திவரதரை தரிசனம் செய்யலாம். 

இந்த தரிசனம் மேற்கொள்வோர் சிறப்பு வரிசையில் அனுமதிக்கப்படுவர்.

வழக்கமான உற்சவங்களுக்கு நேர மாற்றம்: வரதராஜப் பெருமாள் கோயிலில் வழக்கமான உற்சவங்கள் நடைபெறுவதில் மாற்றம் இல்லை. அத்திவரதர் பெருவிழாவோடு வழக்கமான சிறப்பு உற்சவங்களும் சேர்ந்தே நடைபெறும். அதன்படி, ஜூலை 4-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை கோடை உற்சவம், ஜூலை 11-இல் ஆனி கருடசேவை, ஜூலை 25-இல் ஆடிப்பூர உற்சவம், ஆகஸ்ட் 13, 14-ஆம் தேதிகளில் ஆளவந்தார் சாற்றுமுறை உற்சவம், ஆகஸ்ட் 15-இல் ஆடி கருடசேவை ஆகிய உற்சவங்கள் அத்திவரதர் பெருவிழாவோடு நடைபெறும். இந்த நாள்களில், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வழக்கமான  உற்சவங்கள் நடைபெறும்.

பள்ளிகளுக்கு நேரம் மாற்றம்: காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வகுப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, காலை 8.30 முதல் நண்பகல் 1.30 வரை மட்டுமே பள்ளிகள் இயக்கப்படும். வழக்கம் போல் விடுமுறை நாள்களில் பள்ளிகள் செயல்படாது. விடுமுறை நாள்களில் அத்திவரதர் தரிசன நேரத்தில் மாற்றம் இல்லை என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com