சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் வரும் ஜூலை 16-ஆம் தேதி இரவு 10 மணிநேரம் மூடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஜூலை 17-ஆம் தேதி நள்ளிரவு 1.31 மணி முதல் அதிகாலை 4.29 மணி வரை சந்திரகிரகணம் நிகழ உள்ளது. கிரகண காலத்துக்கு 6 மணிநேரத்திற்கு முன் ஏழுமலையான் கோயில் மூடப்படுவது வழக்கம். அதன்படி வரும் ஜூலை 16-ஆம் தேதி இரவு 7 மணிமுதல் 17-ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை 10 மணி நேரத்துக்கு இக்கோயில் மூடப்படும்.
அதன் பிறகு, அதிகாலை 5 மணிக்கு மேல் கோயில் திறக்கப்பட்டு புண்ணியாவாசனம், சுத்தி உள்ளிட்டவை நடத்தப்பட்டு சுப்ரபாத சேவை நடைபெறும். எனவே, ஜூலை 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படும். இந்த நாள்களில் காத்திருப்பு மண்டபங்களில் பக்தர்கள் காத்திருக்க அனுமதி வழங்கப்படாது.
கிரகணத்தை ஒட்டி அன்னதானக் கூடமும் மூடப்படும் என்பதால் அப்போது அங்கு உணவு விநியோகம் செய்யப்படாது. தேவஸ்தானம் நிர்வகிக்கும் அனைத்து கோயில்களுக்கும் இது பொருந்தும். இதை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.