ஏழுமலையான் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ.3.57 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி திங்கள்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.3.57 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.13.50 லட்சம் நன்கொடை
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பலவித வசதிகளை அளித்து வருகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.11.5 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், கல்விதான அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.13.50 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
82,528 பேர் தரிசனம்
ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 82,528 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 27,902 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
செவ்வாய்க்கிழமை காலை 5 மணி நிலவரப்படி காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிறைந்து பக்தர்கள் வெளியில் உள்ள தரிசன வரிசையில் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்கள் 22 மணிநேரத்திற்குப் பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணிநேரத்திற்குள் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினர்.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜஸ்வாமி கோயிலில் 7,934 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் 5,504 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 15,183 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் 708 பக்தர்களும், கபில தீர்த்தத்தில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் 2,891 பக்தர்களும் திங்கள்கிழமை முழுவதும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.