காளஹஸ்தி சிவன் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளான வியாழக்கிழமை வெள்ளி அம்பாரியில் உற்சவர்கள் மாடவீதியில் பவனி வந்தனர்.
காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியை ஒட்டி 13 நாள்கள் வருடாந்திர பிரம்மோற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி புதன்கிழமை இவ்விழா தொடங்கியது. சிவன் கோயிலில் ராத்திரிகள் மிகவும் விசேஷம் என்பதால் ஒவ்வொரு நாள் பிரம்மோற்சவத்துக்கு ஒரு பெயர் உண்டு. அதன்படி 2-ஆம் நாள் பிரம்மோற்சவம் தேவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
எனவே, வியாழக்கிழமை காலை காளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசூனாம்பிகை அம்மன் கோயில் கொடிமரங்களில் கொடியேற்றம் நடைபெற்றது. பக்தர்கள் வேண்டிக் கொண்டு அளித்த புடவைகள் கொடிமரங்களில் கட்டப்பட்டன.
பின்னர் காளஹஸ்தி மாடவீதியில் பஞ்சமூர்த்திகள் மர அம்பாரியில் வீதியுலா வந்தனர். இந்த நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் உற்சவர்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. இரவு வெள்ளி அம்பாரியில் காளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசூனாம்பிகை அம்மனும் மாடவீதியில் வலம் வந்தனர்.