கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறையில், தங்கத்தில் செய்யப்பட்ட புதிய கதவு பொருத்தப்பட இருக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறையில் தற்போது இருக்கும் கதவு, தேக்கில் மூலம் செய்யப்பட்டது. அந்த கதவு மீது தாமிரத்தில் வேலைப்பாடு செய்யப்பட்டு, பிறகு அதன் மீது 4 கிலோ எடையுடைய தங்கத் தகடு பொருத்தப்பட்டுள்ளது.
தற்போது அந்தக் கதவில் விரிசல் காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பழைய கதவுக்குப் பதிலாக, தங்கத்தில் செய்யப்பட்ட புதிய கதவு பொருத்தப்பட இருக்கிறது.
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 11ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. பிறகு இம்மாதம் 21ஆம் தேதி மீண்டும் நடை சாத்தப்படும். எனவே, வரும் 11ஆம் தேதிக்கு முன்னதாக, அக்கோயில் கருவறை கதவு மாற்றப்பட்டு, தங்கத்தில் செய்யப்பட்ட புதிய கதவு பொருத்தப்படவுள்ளது.
இதுகுறித்து திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் ஏ. பத்மகுமார் கூறுகையில், பழைய கதவில் விரிசல் காணப்படுகிறது. இதையடுத்து புதிய கதவு பொருத்தப்பட இருக்கிறது. இந்த கதவை, சபரிமலை ஐயப்பனுக்கு உன்னி நம்பூதிரி தலைமையிலான பக்தர்கள் குழு, காணிக்கையாக அளிக்கிறது. கதவை மாற்றுவது தொடர்பாக சில நாள்களுக்கு முன்பு, தேசபிரசன்னமும் பார்க்கப்பட்டது.
எலம்பள்ளி தர்மசாஸ்தா கோயிலில் இருக்கும் அக்கதவு வரும் 10ஆம் தேதி ஊர்வலமாக கொண்டு வரப்படும். அதை கோயில் சன்னிதானத்தில் வைத்து திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் பெறுவார்கள் என்றார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றதால், சபரிமலையில் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.