ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்

ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்ற திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்

ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்ற திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
 காஞ்சிபுரத்தில் உள்ள மண் ஸ்தலமான ஏலவார் குழலி உடனுறை ஏகாம்பரநாதர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா 10 நாள்களுக்கு வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், பழைய உற்சவர் சிலை பழுதடைந்த காரணத்தால் புதிய உற்சவர் சிலை வடிவமைக்கப்பட்டது. இதில், தங்கம் பெற்றதில் முறைகேடு உள்ளது எனும் புகாரால், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் புலன் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிலையில் எள்ளளவும் தங்கம் இல்லை என உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேலும், புதிய உற்சவர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
 இதனிடையே, பங்குனி உத்திரவிழாவை நடத்துமாறு பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
 இந்நிலையில் பக்தர்கள் திரளானோர் சனிக்கிழமை இரவு கோயில் வளாகத்தில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து பழைய உற்சவர் சிலையை வைத்து திங்கள்கிழமை கொடியேற்றம் நடத்துவது என கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.
 அதைத்தொடர்ந்து, கொடியேற்ற விழா நடைபெறுவதற்கு விரைவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளாக தனி அறையில் வைக்கப்பட்டிருந்த பழைய உற்சவர் சிலையை போலீஸாரின் பாதுகாப்புடன் சிவாச்சாரியர்கள் வெளியே கொண்டு வந்தனர்.
 அதைத் தொடர்ந்து, உற்சவர் சிலைக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்யப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, உற்சவர் முன்னிலையில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், சிவபக்தர்கள் கலந்துகொண்டு உற்சவரை வழிபட்டனர்.
 செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரர் கோயிலில்...
 செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்தர விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 இந்து சமய அறநிலையத் துறை நிர்வகிக்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்களுக்கு பங்குனி உத்திர விழா நடைபெறுவது வழக்கம்.
 இந்த ஆண்டுக்கான விழா திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி சிவன், அம்மன், விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது.
 இதையடுத்து உற்வச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் கொடிமரம் அருகே எழுந்தருளினர். கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமமிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் வேத மந்திரங்களுடன் கொடியேற்றம் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சிவசண்முகப் பொன்மணி உள்ளிட்ட கோயில் பணியாளர்கள், விழாக்குழுவினர், உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com