கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் பங்குனித் தேர் திருவிழாவையொட்டி மார்ச் 15-ல் கல்கருட சேவை நடைபெறவுள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இவ்விழா இன்று கொடியேற்றதுடன் தொடங்கியது.
தொடர்ந்து விழா நாள்களில் காலை, மாலை நம்பெருமாள் வீதியுலா நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக மார்ச் 15-ம் தேதி மாலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கருட சேவை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதில், கல் கருட வாகனத்தில் பெருமாளை சன்னதியிலிருந்து முதலில் இருவர் தூக்குவர். தொடர்ந்து நான்கு பேர், பின்னர் 16 பேர், 32 பேர், 64 பேர் என கூடிக்கொண்டே செல்லும். அந்த அளவுக்குக் கருட வாகனத்தின் எடையும் அதிகரிக்கும்.
சன்னதியிலிருந்து வெளியே வரும் பெருமாளை ஆயிரக்கணக்கானோர் காத்திருந்து தரிசனம் செய்வர். இதையடுத்து மார்ச் 20-ம் தேதி திருத்தேரோட்டமும், தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது.