வருடாந்திர 10 நாள் உற்சவத்துக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
சபரிமலை கோயில் நடை திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டதும், கருவறையின் புதிய தங்க கதவை அர்ப்பணிக்கும் நிகழ்வும், கோயிலை சுத்தப்படுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரு சிறப்பு பூஜைகளை செய்தார். இதைத் தொடர்ந்து கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பைத் தொடர்ந்து, பரவலாக போராட்டங்கள் நடைபெற்றன. இதை கருத்தில் கொண்டு, கோயில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறையின் பழைய கதவுகளில் விரிசல் தோன்றியிருப்பது கண்டுபிடிக்க்கப்பட்டது. இதையடுத்து அந்தக் கதவை மாற்றிவிட்டு, 4 கிலோ எடை கொண்ட தங்க தகடு பொருத்தப்பட்ட புதிய கதவு பொருத்த முடிவு செய்யப்பட்டது. இந்த தங்க கதவை, ஐயப்ப பக்தர் உன்னி நம்பூதிரி தலைமையிலான ஐயப்ப பக்தர்கள் குழு ஏற்றுக் கொண்டுள்ளது.