விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசிப் பெரு விழாவையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோயிலில் மாசிப் பெரு விழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயானக் கொள்ளை 6-ஆம் தேதியும், தீ மிதித் திருவிழா 9-ஆம் தேதியும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காலையில் அங்காளம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, உற்சவர் அங்காளம்மன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை 4 மணியளவில் புதிய தேரில் எழுந்தருளினார். அப்போது, அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்ற பிறகு, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கரகோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக வந்து, சுமார் இரவு 7 மணி அளவில் நிலையை வந்தடைந்தது.
இந்த நிகழ்ச்சியில், செஞ்சி எம்எல்ஏ மஸ்தான், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், உதவி ஆணையர் ஜோதி, கோயில் உதவி ஆணையர் பிரகாஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அறங்காவலர் குழுத் தலைவர் கு.கணேசன், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன், மேலாளர் மணி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.