மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர்.
பெண்கள் கடைப்பிடிக்கும் விரதங்களிலேயே மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது, தலையாயது என்று கூறப்படுவது காரடையான் நோன்புதான். இது காமாட்சி நோன்பு. சாவித்ரி விரதம் என்றும் கூறுவர். இந்தாண்டுக்கான காரடையான் நோன்பு 15.03.19 வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.
காரடையான் நோன்பு எப்படி நோற்க வேண்டும்?
இதற்கு நைவேத்தியம் காரரிசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை என்னும் பணியாரம். இதனால்தான் காரடையான் நோன்பு என்பார்கள். காட்டில் உயிர் பெற்று எழுந்த சத்தியவானுடன் சாவித்திரி அக்காட்டிலேயே நோன்பு அனுஷ்டித்து அங்குள்ள மரப்பட்டைகளின் சிறு இழைகளை நூலாக்கிச் சரடாக அணிந்து கொண்டாள். பழங்களையும் காட்டில் கிடைத்த துவரையையும் கொண்டு செய்த அடையையும் தேவிக்கு நிவேதனம் செய்வித்தாள்.
இப்போது நம் வீடுகளில் செய்யப்படும் இந்த நோன்பிற்கு, பூஜை செய்யும் இடத்தை நன்கு மெழுகிக் கோலமிட்டு சிறிய நுனிவாழை இலை போட்டு இலை நுனியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவற்றை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும் வெண்ணெய்யும் வைக்க வேண்டும். முதிர்ந்த சுமங்கலிகள் தங்கள் இலைகளில் அம்பிகைக்கு ஒரு சரடும் சேர்த்து வைத்துக் கொள்வார்கள்.
மூன்று இலை போடக்கூடாது. நான்கு இலையாகப் போட்டு சரடு கட்டிக்கொண்ட பின் மீதமுள்ள இலையில் வீட்டிலுள்ள ஆடவர்களைச் சாப்பிடச் சொல்லலாம். தீர்த்தத்தால் இலையைச் சுற்றி நைவேத்தியம் செய்த பிறகு அம்பாள் படத்தில் சரடை அணிவித்தபின் இளைய வயதுப் பெண்மணிகளுக்கு வயதில் மூத்த சுமங்கலிகள் சரடு கட்ட வேண்டும். பிறகு தானும் கட்டிக்கொண்டு அம்பிகையை நமஸ்கரிக்க வேண்டும்.
மஞ்சள் சரடு கட்டிக்கொண்டு, காரடையும், வெண்ணையும் கையில் வைத்துக் கொண்டு கீழ்க் கண்ட ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.
பூஜையை முடிக்கும் வரை பெண்கள் எதையும் உண்ணாமல் இருக்க வேண்டும். முடியாதவர்கள் உப்பில்லாத சர்க்கரைவள்ளி கிழங்கு, சிறிதளவு பழம் ஏதேனும் சாப்பிடலாம். ஆனால் மோர், தயிர், பால் என்று எதையும் உட்கொள்ளக்கூடாது.
ஏனைய பிற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக்கொள்வது வழக்கமாயிருக்க இந்தக் காரடையான் நோன்பிற்கு மட்டும் சரட்டில் மஞ்சள் சேர்த்துக் கழுத்தில் கட்டிக்கொள்வார்கள்.
சில அடைகளை வைத்திருந்து மறுநாள் காலை அவற்றை பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டியதும் அவசியம். அடைகளைப் படைக்க வாழை இலை கிடைக்காவிடில் பலா இலைகளைச் சேர்த்து முடைந்து அதில் படைப்பது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.
இந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல குணமான கணவன் கிடைப்பான். இந்த நோன்பின் மிக முக்கியமான பலம் தீர்க்க சௌமாங்கல்யம். அதைவிடப் பெண்களுக்கு வேறு என்ன வேண்டும்...?