திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள ருக்மணி தாயார் சமேத பாண்டுரங்க பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கோபுரம் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் புதன்கிழமை காலை விஸ்வரூபம், புண்யாஹவாசனம், கும்ப ஆராதனம் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, கும்ப புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து, திருக்கோயில் விமானத்தில் உள்ள கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது மஞ்சள் கலந்த புனித நீர் தெளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வேப்பம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேசபெருமாள் வீதி உலா நடைபெற்றது. விழாவையொட்டி, வியாழக்கிழமை முதல் 48 நாள்கள் வரை மண்டல பூஜை நடைபெறுகிறது.
மகா மாரியம்மன் கோயில்...
பொன்னேரி அடுத்த பெரிய மனோபுரம் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி, கணபதி ஹோமம், இருகால பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து மகா மாரியம்மனுக்கும் கோபுர கலசத்துக்கும் புனிதநீர் வார்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மன் வீதி உலா நடைபெற்றது.