ஹைதராபாதில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், கட்டப்பட்ட ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள ஜுப்பிலி ஹில்ஸ் பகுதியில் ரூ. 27 கோடி செலவில் புதிய ஏழுமலையான் கோயிலை கட்டியது. கோயில் பணிகள் முடிவுற்றதையடுத்து, மார்ச் 8 முதல் ஆகம விதிப்படி சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. பின்னர், புதன்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கோயில் கோபுரத்தில் பட்டாச்சாரியார்கள் புனித நீர் வார்த்தனர். தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
குடமுழுக்குக்குப் பின், காலை 10.30 மணிக்கு பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இக்கோயில் வளாகத்தில் கோயிலுடன் மடப்பள்ளி, அர்ச்சகர்கள் நிவாசம், நந்தவனம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இக்கோயிலிலும் திருமலையில் நடைபெறுவது போல் ஆர்ஜித சேவைகள் நடத்தப்பட உள்ளன. அதை பக்தர்கள் இணையதளம் வழியாக முன்பதிவு செய்து கொள்ள தேவஸ்தானம் வசதி ஏற்படுத்தி உள்ளது. மேலும் கோயிலில் மாலை சீனிவாச திருக்கல்யாணமும், ஊஞ்சல் சேவையும் நடத்தப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.