சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பங்குனி உத்ஸவத்தின் 3-ஆம் நாளான வியாழக்கிழமை பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான திருநிலைநாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் நவகிரக தலங்களில் செவ்வாய்க்குரிய தலமாக விளங்குகிறது.
ஆண்டுதோறும், இக்கோயிலில் நடைபெறும் பங்குனி பிரமோத்ஸவம் நிகழாண்டு செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) தொடங்கியது. இவ்விழாவில் 3-ஆம் நாளான வியாழக்கிழமை கிருத்திகை மண்டபத்தில் விநாயகர், சுவாமி- அம்பாள், முருகர், அங்காரகன், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளச் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர், பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.