கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீவஞ்சுளவல்லி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் பங்குனித் திருவிழாவின் நான்காம் நாள் விழாவில் நேற்று உலக புகழ்பெற்ற வேறு எங்கும் காண முடியாத ஸ்ரீகல்கருட சேவை நடைபெற்றது.
அதை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ கல்கருட பகவான் தனது சன்னதியிலிருந்து மாலை 6.30 மணிக்கு அலங்கார மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர் இரவு
10 மணியளவில் ஸ்ரீகல்கருட பகவான் வாகனத்தில் சீனிவாச பெருமாளும், வெள்ளி அன்னப்பட்சி வாகனத்தில் வஞ்சுளவல்லி தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க மங்கள வாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் மின் விளக்குகள் அலங்காரத்துடன் சப்பரத்தில் சுவாமிகள் வீதிஉலா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டார்கள்.
- குடந்தை ப.சரவணன்