உங்க ஜாதகத்தில் சக்களத்தி தோஷம் இருக்கா? ஸ்ரீ ரங்கம் சேர்த்தி சேவை தரிசனம் செய்யுங்க!

பூலோக வைகுண்டமான திருச்சியில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நாளை (21/3/2019) ஸ்ரீ ரங்கநாத பெருமாள்..
உங்க ஜாதகத்தில் சக்களத்தி தோஷம் இருக்கா? ஸ்ரீ ரங்கம் சேர்த்தி சேவை தரிசனம் செய்யுங்க!

பூலோக வைகுண்டமான திருச்சியில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நாளை (21/3/2019) ஸ்ரீ ரங்கநாத பெருமாள் மற்றும் ஸ்ரீ ரங்க நாயகி தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. பங்குனி மாதத்தில் கொண்டாடப்படும் திருவிழா மிகவும் சிறப்பானதாகும். பங்குனியில் நடைபெறும் ஆதி பிரம்மோற்சவம், விபீஷணனால் தொடங்கப்பெற்றது. பங்குனி திருவிழாவில் ஒன்பதாம் திருநாள் "சேர்த்தி சேவை" என்று கூறுவர்.

பங்குனி உத்திரம்

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பன்னிரண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள். உலகிற்கெல்லாம் முதல் தாய் தந்தையராகவும் (மாத்ருகாரகன் பித்ரு காரகன்) கணவன் மனைவியாகவும் விளங்கும் சூரிய சந்திரர்கள் இனைவு பெறும் விசேஷமான தினம் பங்குனி உத்திரம்.

உத்திர நட்சத்திர நாயகன் அதாவது, அதிபதி சூரியன் அதே நாளில் பௌர்ணமி நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன. சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இந்நாளில்தான். அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான்.

இந்த நாளில் சூரியன் மீனத்தில் குருவீட்டிலும் சந்திரன் கன்னியில் உத்திர நட்சத்திரத்தில் புதன் வீட்டிலும் நின்று சமசப்தம சேர்க்கை பெறும் நாள் இது. தெய்வங்களின் பிறந்த நாள், திருமணநாள் என பங்குனி உத்திரம் நாள் மகிழ்ச்சியை ஊட்டக்கூடியது. இந்த நாளில் தான் சிவ விஷ்ணுவின் புதல்வராகக் தர்மசாஸ்தா அவதரித்தார். 

உத்திர நக்ஷத்திரத்திற்கு மாங்கல்ய மங்கள வரம் நிறைந்திருப்பதால்தான், அனைத்து தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவங்கள் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் நிகழ்கின்றன. மாங்கல்ய பலம் தரும் பிரஹஸ்பதி எனும் தேவகுரு பிறந்த நக்ஷத்திரம் எனும் சிறப்பை பெற்றது உத்திரம் நக்ஷத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நாளில் தான் லட்சுமிதாயார் பார்க்கவ மகரிஷியின் மகளாக பூமியில் பார்கவி என்னும் பெயரில் அவரித்தரித்தாள். கைலாயத்தில் சிவபார்வதி திருமணம் பங்குனி உத்திர நாளில் தான் நடந்தது. இந்த திருமணக் கோலத்தைத் தான் சித்திரை விசுவன்று பொதிகையில் அகத்தியருக்கு தரிசனமாக்கினர். ராமன் சீதாதேவியையும், லட்சுமணன் ஊர்மிளாவையும், பரதன் மாண்டவியையும், சத்ருக்கணன் சுருதகீர்த்தியையும் கைப்பிடித்த நாளும் இது தான். முருகப்பெருமான் தெய்வானையை மணம் செய்த நாளும் இதுவே. ஹரிஹர புத்திரனான தர்ம சாஸ்தா எனப்படும் ஸ்ரீ ஐயப்பனும் பூர்ண புஷ்களாம்பாளை கரம் பிடித்ததும் இந்த பங்குனி உத்திர திருநாளில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீரங்கம் சேர்த்தி சேவை

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருத்தலம் வைணவ 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது. இந்தக் கோயிலில் ஆண்டு முழுவதும் ஏதாவது ஒரு வைபவம் நடந்து கொண்டேயிருக்கும். அந்த வகையில் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் புகழ்பெற்ற நிகழ்ச்சியான "சேர்த்தி வைபவம்" மிகவும் உன்னதமான வைபவம் ஆகும்.

ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி வைபவம் நடைபெறுவது குறித்து ஒரு வரலாறு உண்டு. இவ்வாலயத்தில் பங்குனி மாதம் நடைபெறும் "ஆதி பிரம்மோற்சவம்" விபீஷணனால் தொடங்கப்பட்டது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. இதன் ஆறாம் நாள் உற்சவத்தின்போது உறையூரில் அருள்பாலிக்கும் சோழகுல வல்லியான கமலவல்லி நாச்சியார் சந்நிதிக்கு செல்கிறார் நம்பெருமாள். அப்போது புத்தாடை, சந்தனம், திலகம், மாலை அணிந்து புதுமாப்பிள்ளை போல் காட்சி கொடுப்பார். பின்னர் தான் அணிந்த மலர் மாலையை கமலவல்லி நாச்சியாருக்கு அணிவித்து, நாச்சியாரின் மாலையை தான் வாங்கி அணிந்துகொள்வார். பின்னர் இருவரும் திருமணக்கோலத்தில் சேவை சாதிப்பார்கள்.

ஸ்ரீரங்கநாதரான அழகிய மணவாளன், ஒரு பங்குனி மாதத்தில் உறையூர் அருகே வேட்டையாடச் சென்றார். அப்போது அவர் கமலவல்லியைச் சந்தித்தார். ஸ்ரீ கமலவல்லியே சோழ மன்னனின் மகளாகப் பிறந்திருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினர். அண்ணலின் மார்பில் இருக்கும் மஹாலக்ஷ்மியின் அனுமதியின் பெயரில் தான் உறையூர் நாயகியை மணக்கிறார். புதுமாப்பிள்ளை ஆகிறார்! புது மோதிரம் பளபளக்க காவிரி வழியே ஊர் திரும்பும்போது பழைய மோதிரத்தை ஆற்றில் தொலைத்துவிடுகிறார்.

"ஆஹா நம் வீட்டுக்குப்போனால் அரங்க நாயகி' எங்கே நான் அணிவித்த மோதிரம், புது மோதிரம் வந்த ஜோரில் பழையதை வீசி எறிந்துவிட்டீர்களா?' எனக்கேட்பாளே என்ன செய்வது' எனத் தவிக்கிறார் காவிரிக்குப்போய் (அப்போது  நீர் நிறைய இருந்திருக்கும்) பல்லக்கில் வரும் அரங்கன், அன்பர்களை எல்லாரையும் மோதிரத்தைத் தேடச் சொல்கிறான், தானும் தேடுகிறான். ஒன்றும் கிடைக்கவில்லை! இந்தக்காட்சிகள் இன்று அம்மா மண்டபம் காவிரியில் காணக்கிடைக்கும். சல்லடை போட்டு நிஜமாகவே சலிப்பார்கள் நீரை இப்போது மணலை சலிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தப்பு பண்ணிய கணவர்கள் சகஜமாக செய்யும் அசட்டு வழியை மேற்கொள்ள விழைகிறான் ஆகவே ஓசைப்படாமல் (வழக்கமாய் அரங்கன் வருகிறான் என்றால் வாத்திய இசை ஒலிக்கும்) பல்லக்கில் இருந்தபடியே தாயார் சந்நிதி வாசலுக்கு வருகிறார். அன்னைக்கா தெரியாமல் போகும் அரங்கனின் தந்திரம்? டமால் என வாசற்கதவை சாத்திவிடுகிறாள்.

ரங்கநாயகி தாயாரை சமாதானப்படுத்த ஏதாவது சொல்லிச் சமாளிக்கலாம் என்று எண்ணிய ஸ்ரீரங்கநாதர், "காவேரி ஆற்றைக் கடக்கும்போது, நீ அணிவித்த மோதிரம் தவறி விழுந்து விட்டது. அதைத் தேடிக் கண்டெடுக்க காலதாமதம் ஆகிவிட்டது' எனக் கூறினார். எனினும் தாயாருக்கு கோபம் தணியவில்லை. சண்டை துவங்குகிறது! பிரணய கலகம் என்று பெயர். தாயார் சார்பாக சில ஊழியர்கள் தலத்தார் என்று பெயர். பெருமாள் சார்பாக சில ஊழியர்கள் தொண்டுக்குலத்தார் என்று பெயர். குலத்தார் எல்லாம் பெருமாளைத் தடுக்க, குலத்தார் எல்லாரும் தாயாரிடம் கெஞ்சுகிறார்கள்.

ஒரு கட்டத்தில், பெருமாள் சலித்துப் போய், பின் வாங்குவது போல தளர்ந்து பின்னோக்கி நடக்கிறார். சரி, பெருமாள் கிளம்பி விட்டார் என்று நினைத்து, லேசாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்க்கிறாள் தாயார். உடனே பெருமாள் பின் வைத்த காலை, முன் வைத்து ஒடி வருகிறார்.

படார்....உடனே கதவு மீண்டும் மூடிக் கொள்கிறது. இப்படியே மூன்று முறை! ஒரே கலாட்டா தான்!

வடக்குச்சித்திரைவீதி மக்கள் எல்லாரும்  அன்னைக்கு சப்போர்ட் செய்வார்கள் வெள்ளை பூக்களை பல்லக்கின் மீது வீசி எறியும் போது கைதட்டுவார்கள். தெற்கு சித்திரைவீதி மக்கள் பெரும்பாலும் அரங்கனுக்கு சப்போர்ட் பண்ணுவார்கள். கடைசில் மட்டையடி நடக்கும்! மிகவும் மெல்லிய வாழை மட்டைஅதை வைத்து ஒரு சாத்து! மட்டையடி உற்சவம் என்பது இதுதான். பல்லக்கின்மீது வாழைமட்டைகள் தொடர்ந்து வீசப்படும். இந்த உற்சவத்தை "மட்டையடி உற்சவம்' என்றும் சொல்வார்கள்.

இந்த ஊடலை அறிந்த நம்மாழ்வார், அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். பின்னர் ரங்கநாதர் உண்மையை ஒப்புக் கொண்டதால், நம்மாழ்வார் சொற்படி ரங்கநாயகி நாச்சியார், பெருமாளை ஏற்றுக்கொண்டார். இதையொட்டி கொண்டாடப்படும் வைபவத்தை "சேர்த்தி' என்று போற்றுவர்.

ஆதி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளான பங்குனி உத்திரத்தன்று "நம்பெருமாள்' சித்திரை மாதம் உத்திர வீதிகளில் வலம் வந்து தாயார் சந்நியில் எழுந்தருள்வார். அப்போதுதான் மேற்கண்ட சேர்த்தி வைபவம் பங்குனி உத்திர மண்டபத்தில் நடைபெறும். பிறகு திருமஞ்சனம் முடிந்த பிறகு பெருமாளும் தாயாரும் தம்பதி சமேதராக சேவை சாதிப்பார்கள்.

ஸ்ரீ ரங்கமன்னார் சேர்த்தியின் மூலம் உலகிற்கு உணர்த்துவது என்ன? முதல் மனைவியின் சம்மதத்துடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட ஸ்ரீ ரங்கநாதருக்கே இவ்வளவு அவஸ்தைகள் என்றால் மனைவிக்குத் தெரிந்தும் தெரியாமலும் இருதாரம் கொண்டவர்களும் எடுப்பு தொடுப்பு என வைத்துக்கொண்டவர்களும் அடையும் துன்பம் எத்தனை என்பதே இந்த சேர்த்தி மூலம் உலகிற்கு உணர்த்தும் உண்மையாகும்.

கணவன் மனைவி பிரிவு மற்றும் பலதார திருமணங்கள் நடைபெறும் ஜாதக அமைப்பு

1. ஒருவருடைய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானாதிபதியாகிய இரண்டாம் வீட்டின் அதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதி எனும் ஏழாம் வீட்டின் அதிபதிகள் உச்சம் பெறுவது மற்றும் செவ்வாய், ராகு சேர்க்கை பெறுவது மற்றும் ஏழாம் வீட்டை உச்சம் பெற்ற கிரகங்கள் பார்ப்பது.

2. இரண்டாம் வீட்டிலோ அல்லது ஏழாம் வீட்டிலோ எந்த ஒரு கிரஹங்களாவது உச்சம் பெற்று நின்று செவ்வாய், ராகு தொடர்பு பெறுவது.

3. ஒருவருடைய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானாதிபதியாகிய இரண்டாம் வீட்டின் அதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதி எனும் ஏழாம் வீட்டின் அதிபதிகள் நீசம், வக்ரம் பெற்றும் நின்று அசுபர்கள் தொடர்பு பெறுவது.

4. ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையும் திருமணத்தின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது. பொதுவாக பல திருமணங்கள் செய்துகொண்டவர்களின் ஜாதகங்களை பார்க்கும்போது செவ்வாயின் வீடுகளான மேஷம், விருச்சிகம் மற்றும் சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் மற்றும் துலாம் ஏழாம் பாவமாக அமைந்த ஜாதகங்களில் அதிக அளவு இந்த அமைப்பு காணப்படுகிறது.

5. ஏழாம் அதிபதிக்கு வீடு கொடுத்தவர் உச்சமாகி நின்றாலும் பலரை மணக்கும் அமைப்பு ஏற்படுகிறது.

6. ஏழாம் வீட்டில் ஒன்றிற்கு மேல் அசுப கிரஹங்கள் நின்றாலும் பலதார அமைப்பை ஏற்படுத்துகிறது.

7. ஏழாம் வீட்டதிபதி உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் நிற்பது.

8. ஏழாம் வீட்டில் சந்திரன் நிற்பது, ஏழாம் விட்டதிபதி பாப கர்த்தாரி யோகம் பெறுவது ஆகியவையும் பல தார மணத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும்.

9. சுக்கிரன் இரட்டை ராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளில் சுக்கிரனுக்கு வீடு கொடுத்த அதிபதி உச்சமானால் பலரை மணக்கும் அமைப்பு ஏற்படுகிறது.

இன்னும் எத்தனையோ விதிகள் இருந்தாலும் அனேகமாக இந்த விதிகளில் குறைந்தது இரண்டு விதிகள் இருந்தாலே அவர்களுக்கு பலதார யோகம் அமைந்துவிடுகிறது.

உதாரண ஜாதகம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீரங்கமன்னார் என்பது அனைவரும் அறிந்ததே! அவருடைய ஜாதகத்தில் ரிஷப லக்னமும் லக்னத்தில் சந்திரன் உச்சம் பெற்று களத்திர ஸ்தானத்தை பார்த்ததும், குடும்ப ஸ்தானாபதி புதன் உச்சம் பெற்றதும் களத்திர ஸ்தானாதிபதி செவ்வாய் நீசம் பெற்று சுக்கிரன் மற்றும் ராகுவுடன் சேர்க்கை பெற்றதும் அவருக்கு பலதார யோகத்தையும் அவ்வப்போது மனைவியைப் பிரியும் நிலையும் ஏற்பட்டது எனலாம்.

இந்த பங்குனி உத்திர அரங்கன் சேர்த்தி நாளில் திருமண பாக்கியம் அமையாமல் இருப்பவர்கள் தகுந்த கணவன் மனைவியுடன் கூடவும், கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ மற்றொருவரோடு முறையற்ற தொடர்புகள் இருந்தால் அதிலிருந்து விலகவும், சண்டை போட்டுப் பிரிந்து வாழும் கணவன் மனைவி கூடவும், வேலை காரணமாகக் கணவனும் மனைவியும் படுக்கையில் இணைய முடியாமல் தவிப்பவர்கள் கூடவும், வியாபாரத்தில் பிரச்சனை தரும் கூட்டாளிகள் இணக்கமாகவும், அனைத்து பகைவர்களும் நட்பு பாராட்ட விரும்புபவர்களும் அன்னை ஆண்டாளை வணங்குவது சிறப்பாகும். 

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com