நாகலாபுரத்தில் உள்ள வேதநாராயணர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) முதல் 28-ஆம் தேதி வரை சூரிய பூஜை மகோற்சவசம் நடைபெற உள்ளது.
திருப்பதியிலிருந்து சென்னை செல்லும் வழியில் உள்ள நாகலாபுரத்தில் தேவஸ்தானம் நிர்வகிக்கும் வேதநாராயணர் கோயில் உள்ளது. இக்கோயிலில், நான்கு வேதங்களையும் காப்பதற்காக எடுத்த மத்ஸ்ய (மீன்) அவதாரத்தில் வேதநாராயணர் காட்சியளிக்கிறார்.
இங்கு ஆண்டுதோறும் மார்ச் 24-ஆம் தேதி முதல் 3 தினங்களுக்கு சூரியக் கதிர்கள் மூலவர் விக்ரகம் மீது விழுவது வழக்கம். முதல் நாள் பாதத்திலும், இரண்டாம் நாளில் நாபியிலும் (தொப்புள்), மூன்றாம் நாளில் சிரசிலும் (தலை) சூரியக் கதிர்கள் விழும். கோயில் மகா துவாரத்தில் இருந்து 630 அடி தொலைவில் உள்ள மூலவர் சிலையின் மீது சூரியக் கதிர்கள் விழுவதைப் பார்க்க ஏராளமான பக்தர்கள் இக்கோயிலில் திரள்வர்.
சூரிய பூஜை உற்சவத்தையொட்டி வேதநாராயணர் கோயிலில் 5 நாள்களுக்கு தெப்போற்சவம் நடைபெறும். இந்நாள்களில் உற்சவமூர்த்திகள் கோயில் அருகில் உள்ள திருக்குளத்தில் அமைக்கப்பட உள்ள தெப்பத்தில் வலம் வருவர்.
தெப்போற்சவம் முடிந்த பின் உற்சவமூர்த்திகள் முதல் 3 நாள்கள் பல்லக்கிலும், 4-ஆம் நாள் முத்துப் பந்தல் வாகனத்திலும், 5-ஆம் நாள் சின்னசேஷ வாகனத்திலும் மாடவீதியில் வலம் வர உள்ளனர். மகாவிஷ்ணு, நான்கு வேதங்களையும் காக்க மத்ஸ்ய அவதார வடிவில் ஆண்டு முழுவதும் போரிட்டு வருவதால், அவருக்கு வெப்பமளிக்கும் நோக்கில் சூரிய ஒளி 3 நாள்களுக்கு அவரது உடல் மீது விழுவதாக புராணங்கள் கூறுகின்றன. இதை சூரிய பூஜை உற்சவமாக தேவஸ்தானம் நடத்தி வருகிறது.