மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 4-ல் தொடக்கம்: ஏப்.19-ல் ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மதுரை சித்திரைத் திருவிழா உலகப் புகழ் பெற்றது.
மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 4-ல் தொடக்கம்: ஏப்.19-ல் ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மதுரை சித்திரைத் திருவிழா உலகப் புகழ் பெற்றது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

இந்தாண்டு சித்திரைத் திருவிழா ஏப்ரல் 4-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஏப்ரல் 4-ம் தேதி வாஸ்து சாந்தி, நிலத்தேவர் வழிபாடு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 8-ம் காலை கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா தொடங்குகிறது.

இதைத்தொடர்ந்து ஏப்ரல் 8 முதல் 19-ம் தேதி வரை சுவாமி மற்றும் அம்மன் தினசரி காலை மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதிகளில் வீதி உலா நடைபெறுகிறது.

ஏப்ரல் 9-ம் தேதி தங்க சப்பர வாகனம்,  பூத,  அன்ன வாகனம், ஏப்ரல் 10-ம் தேதி தங்க சப்பர வாகனம், கைலாச பர்வதம், காமதேனு வாகனம், ஏப்ரல் 11-ம் தேதி தங்கப்பல்லக்கு வாகனம், ஏப்ரல் 12-ம் தேதி தங்க சப்பர வாகனம், தங்கக் குதிரை வாகனம், 13-ம் தேதி தங்கம், வெள்ளி ரிஷப வாகனம், 14-ம் தேதி சிம்மாசனங்களில் நந்திகேஸ்வரர், யாழி வாகனம், 15-ம் தேதி பட்டாபிஷேகமும், 16-ம் தேதி திக் விஜயமும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 17-ம் தேதி (புதன்கிழமை) காலை நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 8 மணிக்கு கல்யாணக் கோலத்தில் சுவாமி, அம்மன் பூப்பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஏப்ரல் 18-ம் தேதி காலை 5.45 மணிக்கு சுவாமி, அம்மன் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்ரல் 19-ம் தேதி தீர்த்தவாரி,  தேவேந்திர பூஜையுடன் இரவு அம்மன், சுவாமி, ரிஷப வாகனத்தில் புறப்பாடு செய்வதுடன் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

கள்ளழகர் மதுரை புறப்பாடு

அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவையொட்டி அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் திருக்கல்யாண மண்டபத்துக்கு ஏப்ரல் 15-ல் எழுந்தருள்கிறார். ஏப்ரல் 17-ல் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகர் அங்கிருந்து மாலை 6 மணிக்கு மதுரைக்கு புறப்படுகிறார்.

ஏப்ரல் 18 காலை 6 மணிக்கு மதுரை மூன்று மாவடி பகுதியில் பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டழைக்கும் எதிர்சேவை நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 9.30-க்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் திருமஞ்சனமாகிறார்.

தொடர்ந்து ஏப்ரல் 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை)  தல்லாகுளம் கோயிலில் இருந்து அதிகாலையில் புறப்படும் கள்ளழகர் அதிகாலை 5.45-ல் இருந்து 6.15-மணிக்குள் ஆற்றில் எழுந்தருள்கிறார். இதையடுத்து ஏப்ரல் 20-ல் ராமராயர் மண்டகப்படியில் இரவு முழுவதும் தசாவதாரம் நிகழ்ச்சியும்,

ஏப்ரல் 21-இரவு தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகும் சுவாமி, 22-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு பூப்பல்லக்கில் புறப்பட்டு ஏப்ரல் 23-ம் தேதி  காலை 10.30 மணிக்கு அழகர்கோயிலை சென்றடைகிறார். ஏப்ரல் 24-ம் தேதி உற்சவ சாந்தியுடன் கள்ளழகர் திருவிழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com