நகராட்சியில் நிலவி வரும் குடிநீர்ப் பிரச்னை தீர்வதற்கு மழை பெய்ய வேண்டும் என வேண்டி 100 பெண்கள் ஏரியில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
திருத்தணி நகராட்சியில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் குடிநீர் வழங்கும் ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் ஏரிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால், நகராட்சியில் கடும் குடிநீர்ப் பிரச்னை நிலவி வருகிறது.
குடிநீர்ப் பிரச்னை தீரவும், மழை பெய்யவும் வேண்டி திருத்தணி சந்து தெரு, பெரிய தெரு, மேட்டுத் தெரு மற்றும் ஆறுமுக சுவாமி கோயில் தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100 பெண்கள் பழைய தர்மராஜா கோயில் அருகில் உள்ள ஏரியில் வெள்ளிக்கிழமை பொங்கல் வைத்து வழிபட்டனர்.
அப்போது, மழை பெய்ய வேண்டும் என சிறப்பு பூஜைகள் செய்து வருண பகவானை வேண்டினர். இந்த வழிபாட்டில் திரளானோர் பங்கேற்றனர்.