திருவாரூர் ஆழித் தேரோட்டத்தையொட்டி, அஜபா நடனத்துடன் திங்கள்கிழமை இரவு ஆழித்தேரில் தியாகராஜர் எழுந்தருளினார்.
திருவாரூர் தியாகராஜர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற, காவிரி தென்கரைத் தலங்களில் 87-ஆவது சிவத்தலமாகும். மேலும், சப்தவிடங்க தலங்களில் தலைமையானதாகும். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் நடைபெறும் ஆழித் தேரோட்டம் மிகவும் பிரசித்திப் பெற்றது.
ஆசியாவிலேயே 2 - ஆவது பெரிய தேர் எனும் சிறப்புக்குரியது. இக்கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா, ஆழித்தேரோட்டமும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 16- ஆம் தேதி தியாகராஜர் தேவாசிய மண்டபத்துக்கு எழுந்தருளினார்.
தொடர்ந்து, திங்கள்கிழமை (மார்ச் 25) இரவு தேருக்கு தியாகராஜர் வருவார் என அறிவிக்கப்பட்டதையடுத்து, தேரை அலங்கரிக்கப்பட்டு, திருக்காவணம் என்னும் தேவாசிய மண்டபத்திலிருந்து அஜபா நடனத்துடன், சிவ வாத்தியம் முழங்க இரவு 8.10 -க்கு தியாகராஜர் புறப்பாடு நடைபெற்றது. விட்டவாசல், சன்னிதி தெரு வழியாக வந்து தேருக்கு எழுந்தருளினார் தியாகராஜர். அவரோடு விநாயகர், சுப்பிரமணியர், அம்மன், சண்டிகேசுவரர் ஆகியோரும் அந்தந்த தேர்களில் எழுந்தருளினர். செவ்வாய்க்கிழமை காலை முதல் தேரில் ஏறி தியாகராஜரை தரிசிக்கலாம். இதற்கென பொது தரிசன வசதி செய்யப்பட்டுள்ளது.