பாடியநல்லூரில் உள்ள முனீஸ்வரர் அங்காளீஸ்வரி கோயில் தீமிதித் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் 15 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் முனீஸ்வரர் அங்காளீஸ்வரிகோயிலில் 54ஆம் ஆண்டு விழா கடந்த 14ஆம் தேதி காப்புக் கட்டுதல் என்ற கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து, அம்மனுக்கு நாள்தோறும் தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து அம்மன் வீதியுலா நடைபெற்றது.
இந்நிலையில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை, அம்மனை வணங்கி கோயில் மைதானத்தில் அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். தீ மிதித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோயில் நிர்வாகிகளான எஸ்.மனோகரன், ராஜேந்திரன், வேலாயுதம், அறங்காவலர்கள் குழு தலைவர் பி.கார்மேகம் உள்ளிட்டோர் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாதவரம் காவல் மாவட்டத் துணை ஆணையர் ரவளி பிரியாபுனேனி தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.