இன்று தேய்பிறை அஷ்டமி: பைரவர் வழிபாடு செய்ய மறக்காதீங்க!

அந்தகாசூரன் என்ற ஒரு அரக்கன் தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
இன்று தேய்பிறை அஷ்டமி: பைரவர் வழிபாடு செய்ய மறக்காதீங்க!

அந்தகாசூரன் என்ற ஒரு அரக்கன் தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். தாருகாபுரத்தை எரித்த அக்னி சிவனின் நெஞ்சில் சிறு குழந்தையாக இருந்தது. அதைச் சக்தி தேவி வளர்த்து வந்தாள்.

தேவர்களின் துயர் துடைக்க அக்னி குஞ்சுக்கு சிவன் ஆணையிட்டார். அதன் விஸ்வருபம் தான் பைரவ பெருமான். முதலில் 8 பிரிவாகச் செயல்பட்ட ஸ்ரீ பைரவர் பின் சிவன் மாதிரி 64 மூர்த்தங்களில் 64 சக்திகளுடன் அருள்புரிகின்றார்.

பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து லட்சக்கணக்கான உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்படுகிறது.

படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலைக் கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்த கடவுளே அனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவரக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகைக் காக்கிறார். அதன் பின்னர் காலாக்கினி பைரவராகப் பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். 

இவருக்குத் தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எவ்விதமான பூசைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழுமனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோசத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.

அந்தகாரத்தை நீக்கி உலகிற்கு ஒளியைக் கொடுப்பவர் ஸ்ரீ பைரவரே. திரிசூலத்தை மனக்கண்ணினால் எண்ணினாலே போதும். ஸ்ரீ பைரவர் உடன் வந்து அருள் செய்வார். பைரவரின் வாகனம் நாய் - இதுவே நான்கு வேத வடிவமாகும். 

பைரவ வழிபாட்டிற்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சஷ்டி, மாத பரணி நட்சத்திரம் மற்றும் ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை மிகவும் ஆற்றல் அளிக்கும் நாட்களாகும்.

பைரவருக்குண்டான பொது காயத்ரி

சுவாநத் வஜாய வித்மஹே

சூலஹஸ்தாய தீமஹி

தந்தோ பைரவ பிரசோதயாத்

பைரவரின் காயத்ரியை அஷ்டமி தினத்தில் சொல்லி வரலாம். அருகில் இருக்கும் ஆலயத்துக்குச் சென்று பைரவரை வழிபடலாம். நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும். வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமோ, சகஸ்ரநாமமோ அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.

இழந்த சொத்தைத் திரும்பப்பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும் மிளகைச் சிறு மூட்டையாகக்கட்டி நெய் அல்லது நல்லெண்ணெய் இட்டு தீபம் ஏற்றுவது பைரவ தீபமாகும். சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சனை செய்து 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். திருமணத்தடை நீங்க ஞாயிறு இராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பகைபயம் நீங்க 9 முறை பைரவருக்கு அர்ச்சனை செய்து வசதிக்கு ஏற்ப நிவேதனங்கள் செய்ய வேண்டும். இப்படி 9 அஷ்டமிகளில் செய்தால் வியாபார நஷ்டம் விலகும், எல்லாத் தொல்லைகளும் அகலும்.

செல்வம் செழிக்க வளர்பிறை அஷ்டமிகளில் சதுர்கால பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்தக்காசுகளை வீட்டில் பணப் பெட்டியில் வைக்கச் செல்வம் செழிக்கும்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ..!

- கோவை பாலகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com