திருவாரூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் கொரடாச்சேரி. இங்கிருந்து 7 கி.மீ. தொலைவில் விடயபுரம் உள்ளது. இவ்வூரில் பல மகான்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களில் விடயபுரம் சட்டாம்பிள்ளை சுவாமிகள் சிறப்பானவர். 1880-ம் ஆண்டு திரு.சின்னசாமி அகமுடையார் என்பவரின் மகனாகப் பிறந்தவர்தான் விடயபுரம் மகான் என்று அழைக்கப்பட்ட சட்டாம்பிள்ளை சுவாமிகள். இராமசாமி என்ற திருப்பெயர் சூட்டப்பட்டவர்.
ஓர் பண்ணையில் பணிகள் செய்து வந்தார், பண்ணையார் அவருடைய வேலைத் திறமையை மெச்சி அவரிடம் அனைத்துப் பொறுப்புக்களையும் தந்தார். ஒரு நாள் அவருடைய கனவில் மாரியம்மன் தோன்றினாள். தனக்கு ஒரு ஆலயம் அமைத்து அதற்குப் பக்கத்தில் குளமும் தோண்டி தன்னை ஆராதிக்கும்படிக் கட்டளை இட்டாள். ஆலயம் அமைக்கப் பணத்திற்கு எங்கே போவது?
நேரடியாகப் பண்ணையாரிடம் சென்றார். தான் கண்ட கனவைப் பற்றிக் கூறினார். ஒரு வார்த்தைகூட மறுப்புக் கூறாமல் பண்ணையார் சட்டாம் பிள்ளைக்கு அந்த ஆலயம் அமைக்கத் தேவையான அனைத்து உதவிகளும் செய்ய ஆலயம் எழுந்தது. கும்பாபிஷேகமும் நடந்து முடிந்தது.
மாரியம்மன் அன்னை அவருக்கு பலமுறை கனவில் வந்தாள். கட்டளை பிறப்பிக்கத் துவங்கினாள். ஆலயத்திற்கு பெரும் திரளான மக்கள் வர துவங்கினர். பூஜைகள் தொடர்ந்து நடந்தன. கோவில் மெல்ல மெல்லப் புகழ் பெறத் துவங்கியது. ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களுக்கு அன்னையின் பிரசாதம் என்ற பெயரில் கஞ்சி ஊற்றப்பட்டது. அங்கு வந்த மக்களுடைய மனதில் சட்டாம் பிள்ளை ஒரு அவதாரப் புருடராகத் தோன்றவே தமது குறைகளை அவரிடம் வரத் துவங்கினர். வந்தவர்களிடம் 'ஆயி உங்களைப் பார்த்துக் கொள்வாள் கவலைப்பட வேண்டாம்" என ஆறுதல் கூறி அனுப்புவார். வீபூதி தருவார். வியாதிகள் குணமாகத் துவங்கின.
விடய புரத்தில் இருந்த மகானுடைய புகழ் மெல்ல மெல்ல மற்ற இடங்களுக்கும் பரவத் துவங்கியது. மக்கள் கூட்டம் பெருகியது. பலர் அவரிடம் வரலாயினர். பாம்பு மற்றும் தேள் கடி போன்றவை நிமிடத்தில் குணமாயிற்று. பன்னிரண்டு வருடமாக குளத்து நீரை மட்டுமே பருகி கடுமையான தவத்தில் இருந்தார் சுவாமிகள், மந்திரவாதிகளின் மந்திர கட்டுக்களை உடைந்து மக்களைக் காப்பாற்றினார். இவரது சமாதி கோயில் அருகிலேயே உள்ளது.
இப்படிப்பட்ட மகான் 1941-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமாதி அடைந்தார். இன்றைக்கும் விடயபுரம் சென்று அவருடைய சமாதியில் பிரார்த்தனை செய்யும் பக்தர்களைக் காத்தருளி வருகின்றார். வரும் சித்திரை 14 அவரது குருபூஜை நடக்கிறது, அமானுஷ்ய சக்திகளால் பாதிக்கப்பட்டோர் அவசியம் இக்கோயிலுக்குச் சென்று வாருங்கள்.