சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை மற்றும் புனித தோமையாரின் திருத்தலத்தின் 468- ஆவது ஆண்டுப் பெருவிழா, மே 9 கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் போது ஒவ்வொரு நாளும் மாலை 6 மணியளவில் பல அருட்தந்தையர்களால் சிறப்புத் திருப்பலியும் நடைபெறுகிறது. மே 12-ஆம் தேதி, சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா ஆண்டகையால் நற்கருணை பெருவிழாவும், மே 15-ஆம் தேதி அன்று, தருமபுரி ஆயர் லாரன்ஸ் பயஸ் குடும்ப விழா திருப்பலியை நடத்திவைக்கிறார்.
மேலும் மே 18-ஆம் தேதி அன்று, தேர்த் திருவிழாவானது செங்கல்பட்டு ஆயர் நீதிநாதன் ஆண்டகை தலைமையில் நடைபெறுகிறது. திருவிழாவின் இறுதி நாளான மே 19-ஆம் தேதி மாலை 6 மணியளவில், சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி ஆண்டகையால் கொடியிறக்கம் மற்றும் சிறப்புத் திருப்பலியோடு திருவிழா நிறைவுபெறுகிறது. இந்த தகவல்களை திருத்தலத்தின் அதிபர் மற்றும் பங்குத்தந்தையான பி.ஜே.லாரன்ஸ்ராஜ் தெரிவித்தார்.