கும்பகோணம் அருகே நாதன்கோவிலில் உள்ள ஜெகநாதபெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா மே 18-ம் தேதி தொடங்குகிறது.
108 வைணவ திவ்ய தேசங்களில் சோழ நாட்டு திருப்பதிகளில் நாற்பதில் நடுநாயகமாகத் திகழ்வது நந்திபுர விண்ணகரம் என்கிற நாதன்கோவில் சேத்திரமாகும்.
சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் வைகாசி பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
இதன்படி, மே 18-ம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் மே 27-ம் தேதி வரை விழா நாள்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
குறிப்பாக, 24-ம் தேதி மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 26-ம் தேதி காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், இறுதி நாளான 27-ம் தேதி மாலை 6 மணிக்கு புஷ்ப யாக நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு 10 நாள்களும் சுவாமி உள்பிரகார புறப்பாடு நிகழ்ச்சியும், திருமஞ்சனமும், நாலாயிர திவ்ய பிரபந்தசேவை நிகழ்சியும் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை ஜெகந்நாதப் பெருமாள் கைங்கர்ய சபா மற்றும் கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.