குடியாத்தம் கோபலாபுரத்தில் உள்ள அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று அம்மனுக்கு சிரசு ஊர்வலம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா வைகாசி முதல் நாள் நடத்தப்படுகிறது. அந்தவகையில் இன்று சிரசு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் இன்று அதிகாலை 5 மணியளவில் தரணம்பேட்டை ஸ்ரீ முத்தியாலம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அங்கிருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் உள்ள மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது.
சிரசு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் சிதறு தேங்காய்களை உடைத்து தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர். அம்மன் சிரசு ஊர்வலம் வருகிற வழிநெடுகிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடிநின்று அம்மனை தரிசனம் செய்வார்கள். நேர்த்திக்கடனாக அம்மனுக்கு மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபடுவர். மேலும் நேர்த்திக்கடனாக பலர் அம்மன், காளி உள்ளிட்ட வேடம் அணிந்து வழிபடுவார்கள். சிலம்பாட்டம், புலி ஆட்டம் போன்றவை ஊர்வலத்தினை பின்தொடர்ந்து நடைபெறும்.
இரவு 8 மணியளவில் மீண்டும் அம்மன் சிரசு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுண்ணாம்புபேட்டை சலவை படித்துறையில் பூஜைகள் நடத்தி ஊர்வலம் நிறைவு செய்யப்படுகிறது.